Tuesday 5 November 2019

ஆழமும் உயரமும் - 4


திருஇந்தளூர்

பெருமாளின் சயனத் திருக்கோலத்தில், காவேரிக்கரையில் உள்ளவை ஆதிரங்கம் (ஸ்ரீரங்க பட்டணம், மைசூர்), அப்பால ரங்கம் (கோவிலடி, கல்லணை), ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கம்,திருச்சி), சாரங்கம் (கும்பகோணம்) மற்றும் பரிமள ரங்கம் (திருஇந்தளூர், மயிலாடுதுறை) ஆகியவை பஞ்ச ரங்க ஷேத்திரங்கள் எனப்படுகின்றன. திருஇந்தளூர் பஞ்ச ரங்க ஷேத்திரங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

சந்திரன் வழிபட்ட தலம் என ஐதீகம்.

திருவிளநகர்

மயிலாடுதுறைக்கு நான்கு திசையிலும் ஆலமர் கடவுளுக்கான தலங்கள் நான்கு தலங்கள் உள்ளன. வள்ளலார் கோவில், திருவிளநகர் துறை காட்டும் வள்ளல் கோவில், பெருஞ்சேரி வாக்களிக்கும் வள்ளல் கோவில் மற்றும் மூவலூர் வழி காட்டும் வள்ளல் கோவில் ஆகியவை. திருவிளநகர் சம்பந்தர் தேவாரம் பெற்ற தலம். மயிலாடுதுறை – செம்பனார் கோவில் சாலையில் அமைந்துள்ளது.

செம்பொன்னார்கோவில்

சோழர் கால ஆலயம். தேவாரப் பாடல் பெற்றது. இவ்வூரில் சத்ரபதி சிவாஜி வழிபட்ட சுப்ரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது.

ஆக்கூர்
தான் தோன்றி ஈஸ்வரன் கோவில். சுயம்புவாக தோன்றிய தலம். சோழர் காலம்.

திருப்பாம்புரம்
நாக வழிபாட்டில் முக்கியத்துவம் உடைய தலம். சிவராத்திரி இரவன்று கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் மற்றும் நாகூர் ஆகிய தலங்களை அன்றைய இரவில் வழிபடுவர். இசைக்கு மிகவும் பெயர் பெற்ற இடம்.

திருமீயச்சூர்

லலிதாம்பிகை கோயில் கொண்டுள்ள தலம். சாக்த வழிபாட்டில் மிக முக்கிய இடம்.

சிறுபுலியூர்
கருவறை நிறைய பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் இங்கே சின்னஞ் சிறிதாக கைக்குழந்தை போல பள்ளி கொண்டிருக்கிறார். கிருபாசமுத்திரப் பெருமாள்.