Wednesday 6 November 2019

ஆழமும் உயரமும் – 5


கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

கும்பகோணம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான சமய மையமாக இருந்திருக்கிறது. சோழர்கள், விஜயநகரம், நாயக்கர்கள் மற்றும் மராத்தியர் ஆட்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. விஜயநகரப் பேரரசின் மாமன்னரான கிருஷ்ணதேவ ராயர் கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமகத்தில் கலந்து கொண்டிருக்கிறார். சோழர் பாணி மற்றும் நாயக்கர் பாணி கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் உச்சம் பெற்றுள்ள இடம் கும்பகோணம்.

பெருமாள் சன்னிதி இரத வடிவமைப்பு கொண்டது. பெருமாள் கரத்தில் சாரங்கம் என்ற வில்லேந்தியிருக்கிறார். ’’சாரங்கமுரைத்த சரமழை போல்’’ என்கிறது ஆண்டாள் திருப்பாவை.

கும்பகோணம் ராமசாமி கோவில்

ராமசாமி கோயில் ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் பெயர் பெற்ற தலம்.
 
திருஆதனூர்

அகோபில மடத்தால் பராமரிக்கப்படும் ஆலயங்களில் ஒன்று. பெருமாள் பள்ளி கொண்ட பெருமாள். அளக்கும் ’’படி’’யுடனும் ‘’எழுத்தாணி’’யுடனும் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் தலம். நரசிம்மரும் ஆஞ்சநேயரும் சிறப்பாக வழிபடப்படும் தலம்.

புள்ளம்பூதங்குடி

ஸ்ரீராமன் சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் இடம். கொள்ளிடக்கரையை ஒட்டிய ஊர்.

மன்னார்குடி

சோழர்களால் கட்டப்பட்ட ஆலயம் விஜயநகரப் பேரரசாலும் நாயக்க மன்னர்களாலும்  விரிவாக்கிக் கட்டப்பட்டது.  மன்னார்குடி திருக்குளமும் நாயக்க மன்னர்களால் வெட்டப்பட்டது. ஆலயம், கோபுரம், பிரகாரம், வீதி, தேர்  மற்றும் திருவிழா என அனைத்து சிறப்புகளும்  கொண்ட  தலம்.  இங்கே நடைபெறும் ‘’வெண்ணெய்த் தாழி’’ உற்சவம் தமிழ்நாட்டின் சிறப்பான  விழாக்களில் ஒன்று.

திருவாரூர்

ஆரூரா தியாகேசா என்ற பெருமுழக்கத்தோடு மெல்ல நகரும் ஆழித்தேர் என்பது சைவத்தின் பெரும் சிகரங்களில் ஒன்று. தமிழ்நாட்டின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று. புற்று வடிவில் இறைமை வழிபடப்பட்டதிலிருந்து ஆரூரன் தியாகராஜராக வழிபடப்படுவது வரை பெரும் வரலாற்று நகர்வை ஓராலயத்தில் காண சாத்தியமான கோவில். ஆரூர் இசைக்குப் பெயர் போனது. சாக்த வழிபாட்டில் கமலாம்பிகை மிக முக்கியமான கடவுள். ஆலயம் அளவுக்கே பெரிய கமலாலயக் குளத்தை உடையது. முற்காலச் சோழர்களின் தலைநகராக இருந்த ஊர்.