Monday 20 January 2020

சபர்மதி ஆசிரமம்

சென்ற வாரம் அகமதாபாத் சென்றிருந்த போது, சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றேன். காந்தியின் வாழ்வில் ’’சபர்மதி ஆசிரமம்’’ மிக முக்கியமான பங்கை வகித்திருக்கிறது. 
தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய போது, முக்கியமான பல போராட்டங்களை சபர்மதி ஆசிரமத்திலிருந்தே அறிவித்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கமும் உப்பு சத்யாக்கிரகமும் இங்கே அறிவிக்கப்பட்டவை.

காந்தியின் வாழ்வில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. காந்தி தன் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலுமே கூடி வாழ்வதையும் இணைந்து கல்வி பயில்வதையும் சேர்ந்து பணிகளை ஆற்றுவதையுமே செய்திருக்கிறார். மேற்கத்திய சமூக அமைப்பு மனிதனை ஒரு தனியனாகப் பார்க்கிறது. ஒரு தனியனுக்கான சமூகக் கடமைகளும் உரிமைகளும் மட்டுமே அவனுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. காந்தி அரசியலுக்கு வந்த பின்னர் அவர் வசித்த இடங்கள் அனைத்துமே நூற்றுக்கணக்கானோர் உடன் வசிக்கும் ஆசிரமங்கள். தனது வசிப்பிடத்தைச் சுத்தம் செய்வதிலிருந்து ஆசிரமத்தின் எல்லா அன்றாடச் செயல்பாடுகளிலும் தினமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


இன்று இந்தியர்களாகிய நமது வாழ்க்கையில் நாம் சமூகப் பிரக்ஞை என்பதை முழுமையாக இழந்திருக்கிறோம். தன்னலம் என்ற ஒன்றே வாழ்வை வழிநடத்திச் செல்ல இயலும் என்ற எண்ணம் மட்டுமே நம் சிந்தனையை நிரப்பியுள்ளது. சக மனிதர்களை எப்போதும் சந்தேகிக்கும் நம்ப மறுக்கும் போக்கு நம்முள் உருவாகி விட்டது.

ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனம் ஒன்றாகட்டும்

என பிராத்திக்கிறது உபநிஷத்.

காந்தி இந்தியர்களிடம் அந்த ஒருமைப்பாடு உருவாக வேண்டும் என விரும்பினார்.