Sunday 22 March 2020

அழகு

நினைவிருக்கிறதா
நீர் ஆற்றின் கரையில்
மெல்ல அசையும்
பசும்நாக்குகள்
காற்றுடன் உரையாடும்
விருட்சத்தின் அடியில்
காத்திருக்கச் சொன்னாய்

மூச்சுக் காற்றென
சுழல்கின்றன
பகல் பொழுதும்
இரவும்

கண்ணீரால்
முற்றும்
உடல் கரைக்க இயலுமா?
மனம்?
உணர்வு?

நீ மட்டுமே
எஞ்சியிருக்கிறாய்
நினைவுகளாக
உன்னிலிருந்தே அர்த்தமாகின்றன
முடிந்த
நடக்கும் காலங்கள்

எனது
கண் நீர்த் துளிகள்
உன்னைக் கவசமெனக் காக்குமெனில்
அவை
என் தவமாகும்

இனிமை நிறைந்த
உன் நிலத்தில்
எனது கண்ணீர்த் துளிகள்
அசௌகர்யம்
உணரச் செய்திடுமோ
என்று
பதைக்கிறேன்

சந்தித்த
முதல் பொழுதிலிருந்து
இன்னதென்று அறிந்திட முடியாத
இவ்வாறென மொழிய இயலாத
இப்பொழுது எனக் கூறிட இயலாத
தொகுத்துக் கொள்ள இயலாத
உணர்வுகளால்
இப்போதும்
அலைக்கழிக்கப்படுகிறேன்

சந்திப்புக்கான
காத்திருப்பு
கடவுளுக்கான காத்திருப்பாயாவதும்
வாழ்வின் அழகுதானே?