Thursday, 26 March 2020

நாம் உருவாக்கிய உலகம்
ஒரு பலூனின்
எளிமையுடன்
குதூகலத்துடன்
உல்லாசமாக
மிதந்து
சென்று கொண்டே யிருக்கிறது

ஒரு தீபத்தை
ஏற்றுவதற்குத்தான்
நாம் எத்தனை
உணர்ச்சி கொள்கிறோம்
சுரம் கொண்ட குழந்தையை
அணைத்துக் கொள்ளும்
தாயைப் போல

பலிச்சோறு
ஏற்கும்
காகத்தின் கரைதல்
ஏன்
கண்ணீரைக் கொண்டு வருகிறது?

சொல்லா
மௌனமா
என்பதன் தெரிவு
எப்போதும்
அலைக்கழிக்கிறது

இனிமையும்
பிரிவும்
ஊற்றெடுக்கச் செய்யும்
கண்ணீர்
ஒன்றாகவே இருக்கிறது
தினமும்
உதயமும்
அஸ்தமனமும்
நிகழும் உலகில்