Wednesday 22 July 2020

ஆடிப்பிறை

இன்று ஆடிப்பிறை. வானில் பிறை கண்டேன். ஆடிப்பிறை காண்பது அபூர்வமானது என்பார்கள். ஆடியில் அந்தி மழை பொழியும். அந்தி மழை என்பது மாலை ஆறு மணி அளவில் பெய்யத் துவங்கி சிறு சிறு தூரலாக ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் பெய்யும். அதனால் ஆடியில் மாலைகளில் வானம் மூட்டமாய் இருக்கும். அதனால் ஆடிப்பிறை காண்பது அபூர்வம் என்று கூறியிருக்கலாம் என்று படுகிறது. ஊரைச் சுற்றி சில கிராமத்துச் சாலைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன். மாலைப் பொழுதுகளில் அங்கே சென்று வானத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பேன். இது பல வருடப் பழக்கம். இன்று அவ்வாறான ஒரு சாலையில் நின்று கொண்டு பிறையைக் கண்டேன். பிறை தென்படத் துவங்குவதிலிருந்து மறையும் வரை காண்பது மனம் கரையும் ஓர் அனுபவம். 

நாம் எப்போதும் புழங்கும் இடத்தில் நம் மனம் ஒரே விதமாக இயங்குகிறது. அதை விட்டு சற்று விலகிச் சென்றால் நாம் ஓர் விடுபடலை உணர்கிறோம்.

மாற்றத்துக்கான பணிகள் எப்போதும் நிகழ்ந்தவாறே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

வாழ்வின் உண்மைகளை அறிவதும் இறைமையை உணர்வதும் அழகின் அனுபவமும் ஒன்றே என்ற புரிதல் சிறு அளவில் இந்த நாட்களில் இருக்கிறது. 

சத்யம் சிவம் சுந்தரம்

ஈஸ்வர ஹிதம்