Wednesday 22 July 2020

ஒரு காட்சி

காவிரிப் படுகையில் ஆற்றங்கரையில் ஒரு கிராமம்.

பிரம்ம முகூர்த்தத்தில் நான்மறையைக் குறிக்கும் நான்கு மணியோசை ஒலிக்கப்படுகிறது.

கீற்றுக் கொட்டகை ஒன்றில் நூற்றுக்கணக்கான மாடுகள் மணியோசை கேட்டு தங்கள் கழுத்துமணியை அசைக்கும் ஓசை இனிமையாகப் பரவுகிறது.

கொட்டகையின் நுழைவாயிலில் ஆனைமுகத்தானின் சிற்றாலயம். அதில் நெய் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

காலை ஐந்து மணிக்கு நூற்றுக்கணக்கான அக்கிராமத்தின் பெண்கள் ஆவின சாலையில் திரள்கின்றனர்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் முப்பது பாடல்களை இசைக்கின்றனர். பின்னர் சம்பந்தர் தேவாரத்திலிருந்து திருநீற்றுப் பதிகம் பாடுகின்றனர். 
அதன் பின்னர் ஸ்ரீகுமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையால் கலைமகளைத் துதிக்கின்றனர். அபிராமி அந்தாதியால் உமையவளைத் தொழுகின்றனர். 

பெண்களால் மாடுகள் அருகில் உள்ள மைதானத்தில் விடப்படுகின்றன. 

மாட்டுக் கொட்டகை சாணம் அள்ளப்பட்டு தூய்மை செய்யப்படுகிறது. சாணத்தை சிறு சிறு ராட்டிகளாக தட்டி அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் காய வைக்கின்றனர். சில நாட்கள் முன்பு காயவைக்கப்பட்டு உலர்ந்த ராட்டிகள் பணியாளர்களால் நெற்பதர் மூட்டம் இடப்பட்டு தீயிலிடப்படுகின்றன. முன்னர்  தீயிலிடப்பட்ட ராட்டிகள் பதர் நீக்கப்பட்டு திருநீறாக மாற்றப்படுகின்றன. 

பெண்கள் மீண்டும் காலை 10 மணி அளவில் மாட்டுக் கொட்டகைக்கு வருகின்றனர். மாடுகள் நின்றிருந்த இடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் இராட்டையில் நூல் நூற்கின்றனர். 

ஆவின சாலையில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனை இருக்கிறது. அதன் பெயர் ‘’ஆரோக்கிய நிகேதன்’’.  அதில் ஓர் ஆயுர்வேத மருத்துவர் இருக்கிறார். காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அவர் பணியாற்றுகிறார்.  நோயுற்ற கிராம மக்கள் தினமும் அதில் ஆயுர்வேத சிகிச்சை பெறுகின்றனர். 

வாழ்க்கையின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு உதவக் கூடிய கல்வியை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என கிராமத்தின் குழந்தைகள் வந்து பயின்று செல்லும் கல்விச்சாலை ஒன்று அங்கே அமைக்கப்படுகிறது. எளிய பாரம்பர்ய தொழில்நுட்பங்களில் அங்கே குழந்தைகளுக்குப் பயிற்சி தரப்படுகிறது. 

ஆவின சாலைக்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அதில் கால்பந்து, பாட்மிட்டன், கைப்பந்து, மற்றும் கிரிக்கெட் ஆட வசதி செய்து தரப்படுகிறது. ஊரின் குழந்தைகள் அங்கே தினமும் யோகாசனம் பயில்கின்றனர். காலை அந்தியிலும் மாலை அந்தியிலும் கிராமத்தின் குழந்தைகள் கதிர் வணக்கம் செலுத்துகின்றனர். 

கோசாலை , கல்விச்சாலை, ஆரோக்கிய நிகேதன் அனைத்துமே சூரிய ஒளி மின்சாரம் பெறுகின்றன. 

மாலை அந்தியில் மாடுகள் கொட்டகைக்குத் திரும்புகின்றன. 

இரவு கிராமத்தைச் சூழ்கையில் மாடுகளின் கழுத்து மணியோசை மெல்ல எழுகிறது.