Monday 30 November 2020

சிறப்புகள்

1. ’’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் நுண் செயல்பாடுகள். காந்திய வழிமுறையை அடிப்படையாய்க் கொண்டவை. ஒரு சிறிய அலகுக்குள் கூட்டுச் செயல்பாட்டை நிகழ்த்த யத்தனிப்பவை. 

2. ஒரு சிறிய அலகுக்குள் நிகழ்த்தப்படும் நுண் செயல்பாடாக இருப்பினும் பெரிய அலகுகளுக்கும் பொருத்தமானவை. உதாரணமாக நாம் இப்போது ஒரு கிராமத்தில் முன்னெடுக்கும் விஷயத்தை சில அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு சற்று பெரிய அளவில் விரிவாக்கி முன்னெடுக்க முடியும். 

3. விவசாயிகள் நலன் என்பதில் பிரதானமானது விவசாயிகளின் பொருளியல் நலனே. அவர்களுக்குப் பொருளியல் நலன் கிடைக்க அவர்கள் கையில் இருக்கும் நிலத்தின் மூலம் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும். 

4. கூடுதல் வருமானம் சிறு முயற்சியினூடாக அடைய இயலுமென்றால் அதுவே முன்வைக்கப்பட வேண்டும். அது மாற்றத்துக்கான ஒரு நல்ல தொடக்கமாக அமையும். வயல் வரப்புகளில் தேக்கு மரம் வைக்கச் சொல்லும் வழிமுறையை நாம் அவ்வாறான ஒன்றாகவே காண்கிறோம். 

5. விவசாயிகள் இப்போது மேற்கொள்ளும் எந்த விவசாய வழிமுறையிலும் நாம் தலையிடுவதில்லை. அவர்களிடம் ஒரு வேண்டுகோள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ‘’உங்களுக்குச் சொந்தமான வயல் வரப்பில் தேக்கு மரம் நடுங்கள். 15 ஆண்டுகளில் உங்களுக்கு மிகப் பெரிய வருமானம் கிடைக்கும்.’’
அ 
6. தமிழ்நாட்டில் 12,500 கிராமங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கிராமமாவது விவசாயம் சார்ந்து பொருளியல் தன்னிறைவுக்கு அருகில் இருக்க வேண்டும். 

7. ஒரு வருடத்தில் இரண்டு போகம் நெல் பயிரிடுதல் என விவசாயிகள் மனம் பழகி விடுகிறது. மற்ற எதிலும் அவர்கள் மனம் முனைப்பு காட்டுவதில்லை. அதனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டி அவர்கள் செயல் புரிய சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். 

8. ஒரு கிராமத்தின் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் நலனுக்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறோம். அனைவரும் இந்த வேண்டுகோளை ஏற்று செயல் புரிய முன்வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நாளில் முழு கிராமமும் ஒரு செயலில் பங்கேற்கும் போது அச்செயல் மேலும் அடர்த்தி கொள்கிறது. தொடர்ச்சியாக அது குறித்த உரையாடல்கள் கிராம மக்களுக்குள் நிகழ்வதால் அவர்கள் செயலின் அவசியத்தை மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். 

9. அவர்களுக்கு நலன் பயக்கும் ஒரு விஷயத்தை வேண்டுகோளாக முன்வைப்பது மட்டுமே நம் பணி. மற்ற அனைத்தும் கிராம மக்களாலேயே நிகழ்கிறது. 

10. ஒரு கிராமத்தை முழுமையாக அணுகி முழுமையாக செயல் நிகழும் வரை கவனம் கொடுப்பதே ‘’காவிரி போற்றுதும்’’ மின் சிறப்பு. 

11. இத்தனை நாட்கள் ஒரு கிராமத்தில் பணி புரிந்ததில் நிகழ்ந்தது என்ன எனில்

அ. ஒரு கிராமம் கிராம நலனுக்காக ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுத்துள்ளது. 

ஆ. இந்த அடித்தளத்தைக் கொண்டு விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை முன்னெடுக்க முடியும். 

இ. கிராமத்தின் அழகியல் சார்ந்த விஷயங்களை முன்னெடுக்க முடியும். 

12. ஒற்றுமையால் எதையும் சாதிக்க முடியும். ஒற்றுமையே எதையும் சாதிக்கும்.