Saturday 14 November 2020

மாற்று


இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். எண்பது வயது நிரம்பியவர். பல பெரிய தொழில்களை மிக வெற்றிகரமாக மேற்கொண்டவர்.  ஐம்பது ஆண்டுகளாக யோகப் பயிற்சிகள் செய்பவர். அவரைக் காண்பவர்கள் அவருடைய வயது ஐம்பதுக்கு குறைவாக இருக்கும் என்றே நினைப்பார்கள். என் மீது மிகுந்த அக்கறையும் பிரியமும் கொண்டவர். அவரது மகன்கள் வெளிநாட்டில் பணி புரிகிறார்கள்; நண்பரை ஓய்வாக இருக்கச் சொல்கிறார்கள். மகன்களின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து லௌகிகத்திலிருந்து விலகி இருக்கிறார். இன்று அவரைச் சந்தித்தேன். 

எனது தொழில் குறித்து விசாரித்தார். 

‘’சார்! பில்டிங் அப்ரூவலுக்கு பேப்பர்ஸ் கொடுத்திருக்கன். அப்ரூவல் வந்ததும் கட்டிட வேலை ஆரம்பிச்சுடலாம்.’’ 

‘’சவாலான டைம் தம்பி. ஜாக்கிரதையா இருக்கணும்.’’

‘’நம்ம ஸ்டெப்ஸ் எல்லாமே Measured Steps சார்!’’

‘’உங்களைப் பத்தி தெரியும் தம்பி. இருந்தாலும் லௌகிகம் நம்மை மட்டும் சார்ந்தது இல்லை. அது நம்ம கஸ்டமர்ஸையும் சமூகத்தோட பொது மனநிலையையும் சார்ந்தது. எப்பவுமே அது பத்தி ஒரு அவர்னெஸ்ஸோட இருக்கணும்.’’

அனுபவசாலியின் சொற்கள் என்பதால் கவனத்துடன் கேட்டுக் கொண்டேன். 

கிராமத்தில் நிகழும் செயல்களின் முன்னேற்றம் குறித்து கேட்டார். விளக்கமாகச் சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார். 

நான் என் மனதில் இருந்த ஒரு விஷயத்தைக் கேட்டேன். 
 
‘’சார்! இந்த தருணத்துல எனக்கு இன்னும் கொஞ்சம் சப்போர்ட் தேவைப்படுது சார். என்ன செய்யலாம்?’’

சில கணங்கள் என்னைப் பார்த்தார். சில நிமிடங்கள் மௌனம் நிலவியது. 

‘’பெரிய சப்போர்ட் கொடுக்கக் கூடிய ஒருத்தர் பகவான் தான் தம்பி. அவரைத் தாண்டிய சப்போர்ட் வேறொன்னு இருக்கா என்ன?’’

நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

‘’எப்ப நமக்கு சப்போர்ட் தேவைப்படுதுன்னு ஃபீல் பண்றமோ அப்ப நாம செய்யற வேலையை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக்கனும். கடவுள் நமக்கு கொடுக்கற ஒவ்வொரு நாளும் அற்புதமான பரிசு தம்பி. அந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் அபூர்வமானதா ஃபீல் பண்ணுங்க. உங்களைச் சுத்தி இருக்கற சூழ்நிலைய தூய்மையானதா வச்சுக்கங்க. அனாவசியமானதை சேக்காம இருந்தாலே நம்ம சூழ்நிலை அற்புதமா இருக்கும். வீடு, ஆஃபிஸ், வேலை செய்யற இடம் எல்லாத்தையுமே எவ்வளவு அழகா வச்சுக்க முடியுமோ அவ்வளவு அழகா வச்சுக்கங்க. அழகு ஒரு மெட்டீரியல் திங் இல்ல. அது டிவைனிட்டியோட வெளிப்பாடு. அழகுணர்ச்சி எப்பவுமே கூடிட்டே இருக்கற விஷயம் தம்பி.’’

அவரைப் பார்க்க அவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் அப்போது வந்தார். பெரியவர் ஊழியரிடம் அவரது நலனையும் அவர் குடும்ப நலனையும் விசாரித்து விட்டு அவருக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசு அடங்கிய தீபாவளி பரிசுப் பையை உள்ளேயிருந்து எடுத்து வந்து வழங்கினார். அவர் சந்தோஷமாக பெற்றுக் கொண்டு சென்றார். 

‘’தம்பி! நாம என்ன பேசிக்கிட்டு இருந்தோம்?’’

‘’அழகுங்கறது டிவைன். அழகுணர்ச்சி எப்பவும் கூடுறதுன்னு சொல்லிகிட்டு இருந்தீங்க.’’

‘’என்னோட தொழிலை ஆரம்பிச்சப்ப நான் அடிக்கடி பெங்களூர் போவேன். பூத்துக் குளுங்கற பெங்களூர் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா. அந்த மரங்களோட நிழல்ல நடந்து போகும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். வாழ்க்கைல ஒரு நல்லது நடக்கும்னு பலநாள் அங்க இருக்கும் போது நான் ஃபீல் பண்ணியிருக்கன்.’’

நான் அவர் கூறியவற்றை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

‘’தம்பி! எனக்கு உங்களைப் பத்தி தெரியும். உங்களால செய்யக்கூடிய சில விஷயங்களைச் சொல்றன். செய்ங்க. முதல் விஷயம், உங்க வீட்டை தினமும் நீங்க கூட்டி Mob போடுங்க. டவுனுக்கு உள்ள கார், பைக் பயன்படுத்த வேண்டாம். சைக்கிள் பயன்படுத்துங்க. இது ரெண்டாலயும் உங்க உடம்போட கலோரி இன்னும் அதிகமா செலவாகும். யூஸேஜ் குறைவுன்னாலும் உங்களோட காரையும் டூ-வீலரையும் தினமும் துடைச்சு பளிச்னு தயாரா வைங்க. கார், டூ-வீலர் ஃபியூயல் டேங்க்ல எப்பவும் பெட்ரோல் ஃபுல்லா இருக்கணும். சரியா?’’

‘’சரி சார்!’’

பெரியவர் வெளியூர் சென்றால் தான் காரில் போகிறார். டவுனுக்குள் நடந்தே செல்கிறார். எந்த வாகனமும் பயன்படுத்துவது இல்லை. இரண்டு கார் வைத்திருக்கிறார். 

‘’காலைல வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது வானத்தைக் கண்ணால பாத்து ஒரு நிமிஷம் கை கூப்புங்க. நெடுஞ்சாண்கிடையா விழுந்து வணங்குங்க. அதே போல பகல் உச்சி வேலைல எங்க இருந்தாலும் வானத்தைப் பாத்து ஒரு நிமிஷம் கை கூப்புங்க. விழுந்து வணங்குங்க. அதே போல சூரிய அஸ்தமனத்தப்பவும்.’’

பெரியவர் தொடர்ந்து சொன்னார். 

‘’பூமி எல்லைக்குட்பட்டது. வானம் எல்லையில்லாதது தம்பி.’’

‘’சரி சார்! அப்படியே செய்றன்.’’

‘’தினமும் பத்து நிமிஷம் கடவுள்கிட்ட உங்க மனசுல இருக்கற எல்லாத்தையும் சொல்லி பிராத்தனை செய்ங்க. நீங்க நினைக்கறது, உங்களோட சந்தோஷம், உங்களோட கவலைகள், கஷ்டமா நீங்க ஃபீல் பண்ற விஷயங்கள், உங்களுக்குத் தேவைப்படுறது எல்லாத்தையும் கடவுள்ட வாய் விட்டு சொல்லுங்க. நம்ம எல்லாரோட மனசும் கடவுளுக்குத் தெரியும்னாலும் பிராத்தனை மூலம் நம்ம மனசு தூய்மையாகும். மகாத்மா ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பிராத்தனை செய்வார் தெரியுமா?’’

‘’நீங்க சொல்றபடி செய்றன் சார்’’

‘’நாற்பத்தெட்டு நாள் தொடர்ச்சியா இந்த விஷயங்களைச் செஞ்சுட்டு எப்படி இருக்குன்னு என்கிட்ட சொல்லுங்க தம்பி’’