’’காவிரி போற்றுதும்’’ தொடர்பாக நான் பலரைத் தொடர்பு கொண்ட போது, சில விஷயங்களை அவதானிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் வாழும் பலர் - 90 விழுக்காட்டுக்கும் மேலாக - கிராமப்புற பின்னணி கொண்டவர்கள். குறைந்தபட்சம் ஒரு தலைமுறைக்கு முன்னால் கிராமங்களிலிருந்து நகரங்களிலோ மாநகரங்களிலோ குடியேறியிருப்பார்கள். எனவே, அனைவருக்கும் விவசாயம் குறித்து கிராமங்கள் குறித்து ஒரு அபிப்ராயம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கிராமத்தின் பொருளியல் குறித்து ஒரு சித்திரம் இருக்கிறது. எனினும் விவசாயியின் வாழ்க்கை செழிப்படைய நிகழ வேண்டியது என்ன என்ற புரிதல் சமூகத்துக்கு மிகவும் குறைவே. இந்த புரிதல் குறைபாடு கிராமத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல; கிராமத்தில் இருப்பவர்களுக்கும் குறைவு என்பது ஒரு பெரு வியப்பு.
ஒரு கிராமம் முன்னேற்றம் அடைய, அந்த கிராமம் பொருளியல் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பொருளியல் வளர்ச்சியே கிராம முன்னேற்றத்தின் அளவுகோல். ஒரு தமிழக வருவாய் கிராமம் என்பது மிகச் சிறு அலகு. 1000 ஏக்கர் நிலம் என்பது அதன் மொத்த பரப்பளவு. சராசரியாக 450 குடும்பங்கள் இருக்கும். மக்கள் தொகை 1600 என இருக்கும். அவ்வாறான கிராமத்தில் ஒரு பொருளியல் மாற்றம் நிகழுமெனில், மிகக் குறைவான அந்நிலப்பரப்பில் இருக்கும் எல்லா குடும்பங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன் தரும்.
விவசாயிகளின் நலன்களுக்கான நடவடிக்கை என்பது அவர்கள் வருமானத்தை பலவிதங்களில் அதிகரிப்பதற்கான நடவடிக்கையே.
தொழில்நுட்பம் மூலம் பல்வேறு தரவுகள் தொகுக்கப்பட்டு விவசாயிகளின் பொருளியல் நலனுக்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும். தமிழ்நாட்டின் கிராமங்கள் மாற்று எரிசக்தி திட்டங்களில் முனைப்பு காண்பித்தால் இப்போது பயன்படுத்தப்படும் மின்சாரம் மிக அதிக அளவில் மிச்சமாகும். அது மிகப் பெரிய வாய்ப்பு. விவசாயிகளின் விழிப்புணர்வு என்பது ஒரு மாநிலத்தின் பொருளியலையே மாற்றி அமைக்கக் கூடியது.
கிராமங்களில் பலவிதமான முயற்சிகள் நிகழுமாயின் அந்த பணிகளை ஆற்ற தேவையான மனித உழைப்புக்கு நியாயமான ஊதியம் கிடைக்கும்.
இப்போது ஒரு கிராமத்தில் விவசாயிகள் ஈட்டும் வருவாய் ஆகக் குறைவானது; இந்த வருவாயில் அவர்கள் திருப்தி அடைந்து விடுகின்றனர். அதற்கு பல சமூக, பொருளியல் காரணங்கள்.
விவசாயம் சார்ந்து - உணவுப் பொருட்கள் சார்ந்து இப்போது இருப்பதை விட மேலும் கூடுதல் வருவாயைப் பெருக்குவதற்கான முயற்சியே கிராம முன்னேற்றத்துக்கான முதன்மையான செயல்.