Monday, 8 November 2021

மழை


நேற்று இரவு முழுக்க மழை பொழிந்து கொண்டேயிருந்தது. இரவில் உறக்கத்தில் விழிக்கும் போதெல்லாம் மழைத்தூறலின் ஒலி கேட்டவாறிந்தது. மழையின் சத்தம் எப்போதும் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வை மழைக்காலம் எளிதில் உருவாக்கி விடுகிறது. மழை ஓர் ஆசுவாசத்தை மனத்தில் நிறைக்கிறது. மழை நாட்கள் இளம் பிராயத்தின் நினைவுகளை மிக அருகில் கொண்டு வருகிறது. சிறுவர்கள் மழையால் ஆத்மார்த்தமாக மகிழ்கிறார்கள். பெரியவர்கள் உலகம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை விதிமுறைகளை தற்காலிகமாக ரத்து செய்வதால் மழை மேல் சிறுவர்களுக்குப் பேரார்வம். காலம் காலமாக சிறுவர்களின் காகிதக் கப்பல்களை ஏந்தி முன்னழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன மழைநீர் ஓடைகள்.  

சென்னையில் உள்ள ‘’தக்‌ஷிண சித்ரா’’  தென்னிந்தியாவின் வெவ்வேறு விதமான கூரை வீடுகளின் வடிவமைப்பை காட்சிப்படுத்தியுள்ளது. அதில் கடலோர ஆந்திராவில் வசிக்கும் மீனவர்களின் கூரை வீடுகள் வட்ட வடிவிலானவை. வட்ட வடிவிலான வடிவமைப்பு புயலுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியவை. 

எனக்கு வெகுநாளாகவே ஒரு ஆசை. சற்று பெரிய கூரைவீடு ஒன்றில் வசிக்க வேண்டும் என்று. 

கூரைவீடு. சுற்றிலும் மரங்கள். கிணறு. கிணற்றடி. இரவில் ஒளிக்கு அகல் விளக்குகள். இரண்டு பசுமாடு. ஒவ்வொரு வேளைக்கான உணவை அவ்வப்போது தயாரித்து உண்பது. 

இறைமையிடம் வேண்டிக் கொள்கிறேன்.