Monday 15 November 2021

நான்காம் நாள்

இன்று காலையில் நேற்று சென்னைக் கருத்தரங்கில் ஆற்றிய உரையை தளத்தில் பதிவிட்டேன். நண்பர்கள் உரையைக் காணொளியாகக் கண்டு விட்டு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அடுத்தடுத்த அழைப்புகள். மின்னஞ்சல்கள். திருவிழா போல் இருந்தது இன்று. இந்த உற்சாகத்தை ஏதேனும் செயலாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 

இன்று சமையல்காரர்கள் தாமதமாகப் பணிக்கு வந்தனர். அவர்களுக்கு நேரம் , பணி , எனது எதிர்பார்ப்பு ஆகியவை புரிந்து விட்டதால் தாமதமாக வந்தாலும் குறித்த நேரத்தில் பணியை செய்து முடிப்பார்கள் என்பதை நான் உள்ளுணர்வால் உணர்ந்திருந்தேன். என் மனநிலையை அவர்களும் அவ்வாறே உணர்ந்திருப்பார்கள். இன்று எலுமிச்சை சாதம் என்பதால் பணி சற்று எளிது. 

சமையல்காரர்களுடன் சில நாட்கள் இருந்து சமையல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த சில நாட்களாக தோன்றிக் கொண்டிருக்கிறது. சிறுவனாயிருக்கும் போது இப்படியெல்லாம் தோன்றும். இன்னும் மனதுக்குள் அந்த சிறுவன் இருந்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது தன் இருப்பைக் காட்டுகிறான். 

வீட்டில் நான்கு பேருக்கு சமைப்பது என்பது சின்ன பாத்திரத்தில் சின்னச் சின்ன அளவுகளில் தானியங்களைத் தண்ணீரை எண்ணையை எடுத்துக் கொண்டு சமைப்பது. அனைத்துமே சட் சட் என நடந்து விடும். 500 பேருக்கு சமைக்கும் போது நாம் சமையலைக் கவனிக்க நேரம் அதிகம் கிடைக்கும். தண்ணீர் கொதிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு நேரம் ஆகும். எண்ணெய் சட்டியில் எண்ணெய் கொதிக்க நேரம் ஆகும். அப்போது அதில் இடப்படும் மளிகைப் பொருட்களின் நறுமணம், நிற மாற்றம் ஆகியவை பல விஷயங்களைத் தானாகவே சொல்லித் தரும். இந்த உணவிடுதலுக்குப் பின் தினமும் வீட்டில் சமையல் வேலைக்கு உதவுவேன் என்றே நினைக்கிறேன். 

வங்கியில் கொஞ்சம் பணிகள் இருந்தன. சென்று வந்தேன். 

மாலை 5.30க்கு கிராமத்துக்குச் சென்று உணவிட்டு வந்தேன்.