Monday 15 November 2021

மூன்றாம் நாள்

கடந்த 20 மாதங்களாக, ஊரிலிருந்து வடக்கு திசை நோக்கி செல்லும் பயணங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. இரண்டு முறை கடலூர் சென்று திரும்பினேன். ஒரு முறை சிதம்பரம். இரு முறை திருச்சோபுரம் என்ற ஊர். இவை தவிர எங்கும் செல்லவில்லை.  

நேற்று சென்னை பயணமானேன். முதல் நாள் இரவு 9 மணி வரை உணவிடுதல் தொடர்பான பணிகள் இருந்தன. எல்லாவற்றையும் முடித்து விட்டு வந்த போது உடல் சோர்ந்து சலித்துப் போயிருந்தது. காலை 3 மணிக்கு அலாரம் வைத்து விட்டு உறங்கி விட்டேன். 

காலையில் எழுந்ததும் பயணத்துக்கு ஆயத்தமானேன். 

உள்ளூரில் எங்காவது வெளியே கிளம்பும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டோமோ என்ற எண்ணம் ஏற்படாது. ஆனால் வெளியூர் என்றால் என் மனம் சற்று அமைதியற்று இருக்கும். பயணம் தொடங்கி சில நிமிடங்களில் அது சரியாகி விடும். காலை 4.30க்கு பேருந்து நிலையம் சென்று விட்டேன். ஐந்து மணிக்கு ஒரு புதுச்சேரி விரைவுப் பேருந்து வந்தது. அது 8 மணிக்கு புதுச்சேரியில் கொண்டு போய் விட்டது. காலை உணவை அங்கே அருந்தினேன். 8.30 க்கு சென்னை செல்லும் குளிர்சாதன வண்டி ஒன்றில் ஏறி அமர்ந்தேன். பயணிகள் மிகக் குறைவாகவே இருந்தனர். இருக்கைக்கு பக்கத்தில் பெரிய கண்ணாடி. பயணம் மிக லகுவாக சொகுசாக இருந்தது மனதுக்கு தெம்பாக இருந்தது. 

சமையல் பணியாளர்கள் வந்து பணியைத் துவங்கி விட்டனர் என கல்லூரிப் பேராசிரியரான நண்பர் குறுஞ்செய்தி அனுப்பினார். ஒரு பொறுப்பை ஏற்று விட்டால் என் மனம் அதையே சுற்றி சுற்றி வரும். நண்பர் இருக்கிறார் என்பதால் ஓய்வாக இருந்தேன். 

சென்னைக் கருத்தரங்கில் மாலை அமர்வில் பேச வேண்டும். பேசி முடித்த பின் அலைபேசியைப் பார்த்தேன். நண்பரின் குறுஞ்செய்தி வந்திருந்தது. வெஜிடபிள் சாதம் தயாரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று நண்பர் கிராமத்தின் 500 பேருக்கு வினியோகித்திருக்கிறார் என. அவருக்கு நன்றி தெரிவித்து பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.