Wednesday 1 December 2021

ஓவியம் - தேடல்கள், புரிதல்கள் - 1

நவம்பர் 14 அன்று சென்னையில் நடைபெற்ற எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்த கருத்தரங்கில் உரையாற்றியவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களை நினைவுப்பரிசாக அளித்தார். ஓவியம் - தேடல்கள், புரிதல்கள்-1 என்ற புத்தகம் என்னிடம் வந்தது. இந்நூலின் ஆசிரியர் ஓவியரான திரு. கணபதி சுப்பிரமணியம். மறுநாளே நூலை வாசிக்கத் தொடங்கினேன். ஆர்வமூட்டக்கூடிய நூல்.   

எல்லாக் கலைகளும் ஒன்றே என்ற எண்ணத்தை இந்த நூல் உருவாக்கியது. ஓர் ஓவியம் இசையாகக் கேட்கப்பட முடியும்; ஒரு கவிதை ஒரு சிற்பமாக ஆக முடியும் என்ற சாத்தியத்தை வாசக மனத்தில் தோன்றச் செய்கிறது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்வாலை, செத்தவரை ஆகிய ஊர்களில் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் தீட்டிய குகை ஓவியங்களைக் கண்டிருக்கிறேன். 

மனிதனைக் குறித்தும் மனித வாழ்க்கையைக் குறித்தும் மானுட அகம் குறித்தும் பல்வேறு விதமான வினாக்களையும் வியப்புகளையும் உருவாக்கக் கூடியவையாக அவை உள்ளன. கலை என்னும் ஒன்று உருவாவதற்கு முன்பே கலை உணர்வு மானுடனுக்கு உருவாகி விட்டது என்பதை உணர்த்தக் கூடிய  ஓவியங்கள் அவை. 




மானுட வரலாற்றில் ஓவியம் என்ற நுண்கலை வளர்ந்து வந்திருக்கும் பாதையை இந்த நூலில் மிக அழகாக அடையாளம் காட்டுகிறார் நூலாசிரியர். 
ஆசிரியரின் மொழி மிக நேர்த்தியானது. சரளமானது. எழுத்தின் சொல்லின் உச்சபட்ச சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டது. நூலை மிகவும் கலாபூர்வமானதாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர். 

ஒவ்வொரு அத்தியாத்தையும் உலகின் மகத்தான கலை ஆளுமைகளின் மேற்கோளுடன் துவக்குகிறார். உலகின் ஆகச் சிறந்த ஓவியங்கள் சிறப்பாக அச்சிடப்பட்டுள்ளன. 

நுண்கலைகள் குறித்த ஆர்வம் மிக்க எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

நூல் : ஓவியம் - தேடல்கள், புரிதல்கள் -1 ஆசிரியர் : கணபதி சுப்பிரமணியம் பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்,  214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர்,  வேளச்சேரி, சென்னை- 42 . விலை : ரூ.350