Monday 24 January 2022

உலகினும் பெரிது

இன்று ‘’காவிரி போற்றுதும்’’ உவகையும் பெருமிதமும் கொள்ளும் விதத்தில் ஒரு செயல் நிகழ்ந்துள்ளது. குடியரசு தினத்தை ஒட்டி ஒரு கிராமத்துக்கு ஆயிரம் பூமரக் கன்றுகள் வழங்குவதாக முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நாம் வழக்கமாக மரக்கன்றுகளை வாங்கும் நர்சரியில் இருந்த ஆயிரம் பூமரக் கன்றுகள் சட்டென விற்பனையாகி விட்டன. எனவே ஒரு புதிய ஊரில் இருந்து வாங்க வேண்டிய நிலைமை. எனக்கு கன்றுகளை கண்ணால் பார்த்து தேர்ந்தெடுத்தால் தான் திருப்தி. எனக்கு இங்கே கிராமத்தில் அதிகமான பணிகள் இருந்ததால் செல்ல முடியாத நிலை. புதுக்கோட்டையில் ஒரு நர்சரியில் ஆர்டர் செய்தோம். தொகையை இங்கிருந்து அவர்கள் கணக்கில் செலுத்தினோம். புதுக்கோட்டையிலிருந்து பூமரக் கன்றுகள் வர வேண்டும். 

புதுக்கோட்டையில் இருக்கும் எனது நண்பரும் நுட்பமான இலக்கிய வாசகரும் இயற்கை விவசாயம் பசுப் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னெடுப்பவருமான திரு. சிதம்பரம் அவர்களுக்கு காலையிலேயே ஃபோன் செய்து விபரத்தைச் சொன்னேன். விஷயத்தை முழுமையாக கிரகித்துக் கொண்டார். 

இன்று மதியம் நான் இங்கிருந்த அனுப்பிய வாகனத்துடன் புதுக்கோட்டையில் இணைந்து கொண்டு மூன்று நர்சரிகளுக்கு அந்த வாகனத்தை கூட்டிச் சென்று நான்கு மணி நேரத்துக்கு மேல் உடனிருந்து இருப்பதிலேயே ஆகச் சிறந்த பூமரக் கன்றுகளை ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார். ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் நண்பருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தானும் ‘’காவிரி போற்றுதும்’’ பகுதி தானே தனியாக ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்பார் நண்பர். 

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

என்கிறார் பேராசான்.