Monday 14 February 2022

நன்றி (மறு பிரசுரம்)



சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கையே. உயிர்கள் அனைத்தையும் சமமாகக் காண்பது என்பதே இந்தியப் பண்பாடு உலகுக்கு அளித்த கொடை. மேலான சக வாழ்வை நோக்கி நகர்வதே மானுட விடுதலையாக இருக்க முடியும். 

மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் நவம்பர் 12 தொடங்கி ஆறு நாட்கள் நண்பர்களின் ஆதரவால் தினமும் 500 பேருக்கு உணவளித்தோம். இது முற்றிலும் நண்பர்களால் மட்டுமே சாத்தியமானது. அவர்களின் உணர்வு மகத்தானது. சொந்த நிதி அளித்ததோடு தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இந்த செயல் குறித்து கொண்டு சென்று அவர்களையும் இதில் பங்கு பெறச் செய்தார்கள். தினமும் நிகழும் நிகழ்வுகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள் ; ஊக்கம் அளித்தார்கள்; செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் எப்போதும் உடனிருப்போம் என்றார்கள்.  அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியாவின் சாமானிய மக்களுக்கு சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் விருப்பமும் பெரிய அளவில் இருக்கிறது. சமூகச் செயல்பாட்டாளனாக நாளும் நான் உணரும் விஷயம் இது. சக மனிதனை அவன் இருக்கும் இடத்தில் சந்தித்தோம் என்றால் அவனை நம்மால் மேலும் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆறு நாட்களும் சமையல் செய்து கொடுத்த சமையல்காரர்கள் மிகச் சுவையான உணவை சமைத்து நேரத்துக்கு அளித்தார்கள். அவர்களுக்கு நன்றி. சமையல் என்னும் கலையின் ஆரம்ப பாடத்தினை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.  

ஊர் மக்கள் தங்கள் அன்பாலும் பிரியத்தாலும் இதயத்தை நிறையச் செய்தார்கள். அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். 

‘’காவிரி போற்றுதும்’’ நுண் செயல்பாடுகளாக தமது பணிகளை முன்னெடுக்கிறது. நுண் அளவில் விஷயங்களைத் திட்டமிடுதலும் செயல்படுத்தலுமே அதன் வழிமுறைகள். ஒரு தீபச் சுடர் ஒரு அறையின் இருளை சில கணங்களில் நீக்குவது போன்ற எளிய முறைகள் நம் செயல்முறைகள். நம்மிடம் எப்போதும் செய்வதெற்கென பணிகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.