Wednesday 6 July 2022

காணும் பொருளாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் மிகவும் இனிமையான இயல்பு கொண்டவர். அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். பயணங்களில் மிக்க ஆர்வம் கொண்டவர். சைக்கிளில் நெடுதூரம் பயணிக்கக்கூடியவர். மாதத்திற்கு இரண்டு நாட்கள் சைக்கிள் பயணத்துக்காக ஒதுக்கி வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்பவர். சமூகப் பணிகளில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பவர். வாசிப்புக்கு தினமும் நேரம் ஒதுக்குபவர். 

அவரிடம் நான் வலைப்பூ துவங்குமாறு பல நாட்கள் வற்புறுத்திச் சொன்னதுண்டு. ஒரு நாளின் பெரும்பகுதியை அறிவியல் ஆய்வகத்தில் செலவிடுவதால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்குமா என ஐயம் கொண்டிருந்தார். 

சில நாட்களுக்கு முன், அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. ஒரு ஆங்கில விஞ்ஞானக் கட்டுரையை பத்து பக்கத்துக்கு தமிழில் மொழிபெயர்த்திருந்தார். மிக நல்ல மொழிபெயர்ப்பு. படைப்பூக்கம் கொண்ட மொழியில் அந்த கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தீரா ஆர்வமும் நுட்பமான மொழிப் பிரக்ஞையும் கொண்ட ஒருவரால் மட்டுமே இத்தகைய மொழிபெயர்ப்பை மேற்கொள்ள முடியும். அந்த கட்டுரையை மிகச் சில மாற்றங்களுடன் ஒரு இலக்கிய இதழுக்கு அனுப்புமாறு நண்பரிடம் மின்னஞ்சலில் கேட்டுக் கொண்டேன். 

பாரதி கவிதை ஒன்றில் ‘’காணும் பொருளாய் - காண்பதெல்லாம் காட்டுவதாய்’’ என்ற வரி வரும். கலைத்தாயின் கருணை மிகப் பெரியது.