Thursday 7 July 2022

வாய்ப்பு ( நகைச்சுவைக் கட்டுரை)

’’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளருக்கு ஒரு தன்மை உண்டு. அதனை அவர் தன்னுடைய பலம் என்றும் சொல்வார். எந்த செயலையும் மிகக் குறைவான செலவில் மிக நிறைவான வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது செயல்முறை. எனினும் தாராளமாக செலவு செய்து பழகியவர்கள் அவருடன் இருக்க நேர்ந்தால் அவர்கள் நிலை பரிதாபம் தான். 

ஒரு முறை நான்கு நண்பர்களுடன் அமைப்பாளர் ஹசன் சென்றிருந்தார். நால்வரும் ஒரு பெரிய அறையில் தங்கியிருந்தார்கள். காலை பொழுது விடிந்ததும் அதில் இளையோனான நண்பன் டூத் பிரஷ்ஷின் முழு நீளத்துக்கும் டூத் பேஸ்ட்டை இட்டு பல் துலக்க முற்பட்டான். அமைப்பாளர் , ‘’தம்பி ! என்ன செய்யற நீ?’’ என்று பதட்டமாகி விட்டார். ‘’அண்ணன்! பல் துலக்கப் போறேன்’’. ‘’ஒரு பட்டாணி அளவு டூத்பேஸ்ட் போதும். நீ ஏன் முழு பிரஷ் நீளத்துக்கும் யூஸ் பண்ற’’. ‘’நீங்க சொல்லித்தான் பேஸ்ட் மினிமமா கூட பயன்படுத்தலாம்னு தெரியுது. நான் சின்ன குழந்தைலேந்து இப்படித்தான் யூஸ் பண்றன்’’. 

அமைப்பாளர் நண்பர்கள் மூன்று பேருக்கும் காந்தி - நேரு கதை சொன்னார். அலகாபாத்தில் ஆனந்த பவனில் காந்தி தங்கியிருக்கிறார். பல் துலக்க மிகக் குறைவான அளவு தண்ணீரை தனது வழக்கம் போல் காந்தி பயன்படுத்துகிறார். அதனைப் பார்த்த நேரு, ‘’பாபுஜி ! நம்ம தோடத்துக்குப் பின்னால கங்கை கரை புரண்டு ஓடுதே. ஏன் இவ்வளவு அளவா யூஸ் பண்றீங்க’’ என்று கேட்கிறார். காந்திஜி அதற்கு ‘’கங்கை உங்களுக்கும் எனக்கும் மட்டும் ஓடலை. உலகத்துல இருக்கற எல்லாருக்காகவும் ஓடுது. அந்த உணர்வு நமக்கு எப்பவும் இருக்கணும்’’னு சொல்கிறார். நண்பர்களுக்கு அமைப்பாளர் நிறைய கதை தெரிந்து வைத்திருக்கிறார் என மகிழ்வதா அல்லது காலையில் டூத் பேஸ்ட் விஷயத்திலிருந்தே துவக்கி விட்டாரே என விசனப்படுவதா என முடிவெடுக்க முடியவில்லை. டூத் பிரஷின் முழு நீளத்துக்கும் இடப்பட்ட பற்பசையை என்ன செய்வதென்ற குழப்பம் இளையோனுக்கு நீங்கவேயில்லை. 

அன்று காலையிலேயே அமைப்பாளருக்கு உற்சாகமாக துவக்கம் நிகழ்ந்து விட்டதால் நுகர்வு, உற்பத்தி, உபரி , நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம், கம்யூனிசம் உலக வரலாற்றில் நிகழ்த்திய படுகொலைகள், காந்தியம், சூழியலின் அடிப்படைகள் என கிட்டத்தட்ட 2000 வருட உலக வரலாறை அன்று காரில் பயணித்த போது பேசிக் கொண்டிருந்தார் அமைப்பாளர். சட்டென துவங்கி சட சட என விபரங்களையும் தரவுகளையும் முன்வைப்பார். பின்னர் ஒரு இடைவெளி விடுவார். நண்பர்கள் ‘’அப்பாடா’’ என்றிருப்பார்கள். உண்மையில் அந்த இடைவெளியில் தான் சொன்ன தரவுகளை தன் மனதில் ஓட்டியவாறு தனது அபிப்ராயங்களை சொல்ல ஆரம்பிப்பார். ஒன்று சொல்லி முடித்ததும் இன்னொன்று தோன்றி விடும். அபிப்ராயங்கள், சம்பவங்கள், கதைகள், கிளைக் கதைகள் என விஷய்ம் விரிவாகிக் கொண்டே செல்லும். பயணித்த இரு நண்பர்கள் இளையோனிடம் சொன்னார்கள். ‘’இந்த டிராவல் முடியற வரைக்கும் பிரபு முன்னாடி நீ டூத்பிரஷோட வரவே கூடாது’’. 

அமைப்பாளருக்கு அவருக்கே உரிய சில பிரத்யேகமாக வழக்கங்கள் உண்டு. அவர் வெளியூர் சென்றால் தனது மோட்டார்சைக்கிளை பேருந்து நிலையத்திலோ அல்லது ஜங்ஷனிலோ உள்ள ஸ்டாண்டிலோ வைத்து விட்டு செல்ல மாட்டார், அதற்கு பதிலாக நடந்து செல்வார். அமைப்பாள்ர் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் 2 கி.மீ. ஜங்ஷன் 5 கி.மீ. ஜங்ஷனில் ரயில் பிடிக்க வேண்டும் என்றால் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து சென்று அங்கிருந்து பேருந்தில் ஜங்ஷன் சென்று ரயிலில் பயணிப்பார். நண்பர்கள் என்ன காரணம் என்று கேட்பார்கள். ‘’ நம்ம வண்டி வீட்டுல இருந்தா அது நாமே வீட்ல இருக்கற மாதிரி ஒரு ஃபீலை வீட்ல உள்ளவங்க கிட்ட உருவாக்கும். நாம ஊர்ல இல்லன்னு அவங்க நினைக்க மாட்டாங்க. ‘’. நண்பர்களுக்கு ‘’நீங்க இல்லன்னா உங்க வீட்டுல இருக்கறவங்க எவ்வள்வு சந்தோஷமா இருப்பாங்க தெரியுமா?’’ என்று கேட்க நுனி நாக்கு வரை வந்து விடும். ஆனால் அமைப்பாளரிடம் சொல்ல முடியாதே! 

அமைப்பாளர் ஒரு பெரிய கட்டுமான வேலை ஒன்றைத் தொடங்க இருக்கிறார். ரெவின்யூ, சட்டம், வரி, ஜி.எஸ்.டி, அப்ரூவல், சேல்ஸ், கஸ்டமர் என பல அம்சங்கள் உள்ளடங்கியது. முழுப் பொறுப்பும் அமைப்பாளருடையது. ஒரு செயல் திட்டம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் அமைப்பாளர் சொன்னார். ‘’ எனக்கு ஒரு மூணு நாள் வேணும். எந்த டிஸ்டர்பன்ஸூம் இல்லாத அமைதியான இடமா இருக்கணும். ஒரு ஒரு கொயர் நோட் எடுத்துட்டு போய்ட்டு யோசிக்க வேண்டிய - செயல் படுத்த வேண்டிய எல்லா விஷயத்தையும் குறிப்புகளா எழுதி வச்சிடறேன். அந்த இடத்துக்கு போகும் போது செல்ஃபோன வீட்டுலய சுவிட்ச் ஆஃப் செஞ்சு வச்சுட்டு போயிடனும்.’’ 

நண்பர்களிடம் தனது தேவையை சொல்லி அவ்வாறான பொருத்தமான இடம் எது என்று ஆலோசனை கேட்டார். கணிசமான வாடகை கொண்ட தங்குமிடங்களை நண்பர்கள் பரிந்துரைத்தனர். அந்த வாடகையில் அமைப்பாளர் ஒரு கிராமத்தில் எல்லா வீடுகளுக்கும் பூச்செடிக் கன்றுகள் கொடுத்து விடுவார் என்பதால் நண்பர்கள் பரிந்துரை  அத்தனையையும் நிராகரித்து விட்டார். 

ஒருநாள் இடத்தின் உரிமையாளருக்கு அமைப்பாளர் ஃபோன் செய்தார். ‘’ என்னோட ஃபிரண்டுக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம். அவன் நம்ம ஊர் வழியாத்தான் அவனோட நேடிவ்க்கு டிரெயின்ல போறான். அவனுக்கு நம்ம ஊரு ஸ்வீட்ஸ் கொடுத்து அனுப்பி வைக்கணும்னு நான் பிரியப்படறன். அவன் டிரெயின் அதிகாலை 4 மணிக்கு நம்ம ஊருக்கு வரும். நான் ஸ்வீட் வாங்கிட்டன். நாம என்ன செய்வோம் ஜங்ஷனுக்கு கிளம்பி நைட் 11 மணி போல போய்டுவோம். நாம டிஸ்கஸ் செய்ய தெளிவா 5 மணி நேரம் டைம் கிடைக்கும். எல்லா விஷயமும் என் மைண்ட்ல மூட்டமா இருக்கு. எழுத ஆரம்பிச்சன்னா ஒரு ஸ்ட்ரக்சர் கொண்டு வந்துடுவன். ஜஸ்ட் நீங்க கூட மட்டும் இருங்க. ரெண்டு வேலையையும் நாம ஒன்னா முடிச்சுடலாம்’’

அமைப்பாளர் தனது வண்டியை வீட்டில் வைத்து விட்டு உரிமையளர் உடன் வர உரிமையாளர் வண்டியில் ரயில்வே ஜங்ஷன் நோக்கி புறப்பட்டார். ஸ்வீட் பார்சல் மற்றும் ஒரு கொயர் நோட்டுடன்.