Wednesday 17 August 2022

ஐம்பது ஒப்புகைகள்

மாநில அரசு நிர்வாகம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த செயல்பாட்டு முறைகளின் படியே இயங்கிக் கொண்டிருக்கிறது. காகிதங்களையும் தபால்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு இயங்குமுறையே இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரு மனுவை அனுப்பி அதனை நகலெடுத்து அதற்கான ஒப்புகை வரப்பெற்றதும் அதனைக் கோப்பில் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒவ்வொரு முறையும் மனு அனுப்பும் போது நகல் எடுக்கும் கடைகளுக்குச் செல்வதும் பின்னர் அஞ்சலகம் செல்வதும் என நகல் எடுக்கும் கடைகளில் உள்ள உரிமையாளர்களும் பணியாளர்களும் அஞ்சலக ஊழியர்களும் நண்பர்களாகி விட்டனர். சட்டம் வழங்கும் உரிமைகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து இயங்குவதால் வாரத்துக்கு இரண்டு மனுவாவது மாநில அரசுத்துறைகளுக்கு அனுப்புவதாய் உள்ளது. இன்று ஒரு பதிவுத் தபால் அனுப்பச் சென்ற போது ஒப்புகை தபால் அட்டை கேட்டேன். ‘’சார் ! ரிஜிஸ்டர் போஸ்ட் அக்னாலெட்ஜ்மெண்ட் கார்டு ஐம்பதோட விலை ரூ. 3 தான். நீங்க வாரம் ஒரு ரிஜிஸ்டர் அனுப்பறீங்க. அதனால 50 கார்டு வாங்கிக்கங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கும்’’ என்றார் அஞ்சல் நிலைய ஊழியர். ஐம்பது ஒப்புகை அட்டைகள் வாங்கி வைத்துக் கொண்டேன்.