Wednesday 3 August 2022

சிலம்பு

நேற்று இரவு நினைவுகளில் காவிரி இருந்து கொண்டே இருந்தது. வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நதி என்றுமே பிரியத்துக்குரியது. ’’ஆடிப்பெருக்கு’’ இங்கே அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் நன்னாள். வீட்டின் இளையோர் காவிரியின் காப்பினைக் கையிலும் கழுத்திலும் கட்டிக் கொள்ளும் நாள். நேற்று சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. என்னிடம் உள்ள ஒரு சிலப்பதிகார நூல் உரை எதுவுமின்றி நேரடியாக சிலப்பதிகாரச் செய்யுளைக் கொண்டது. எனவே அளவில் சிறியது. மங்கல வாழ்த்துப் பாடலிலேயே காவிரியின் பெயர் வரும். மங்கல வாழ்த்துப் பாடலில் திங்களையும் ஞாயிறையும் மாமழையையும் பூம்புகாரையும் போற்றுதும் போற்றுதும் என இளங்கோ வாழ்த்திப் பாடுகிறார். ஆயினும் அந்த பாடலில் ’’காவிரி’’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ. 

கம்பன் கவி குறித்து ‘’யானை பிழைத்தவேல்’’ எழுதினேன். திருவள்ளுவப் பேராசானின் குறிப்பிட்ட சில குறட்பாக்கள் குறித்து ‘’ஆசான் சொல்’’ எழுதினேன். நெடுநாட்கள் விரும்பிய திட்டமிட்ட சிலப்பதிகாரம் குறித்து எழுதத் துவங்க உள்ளேன். 

ஆடிப்பெருக்கன்று அதனைத் தொடங்குவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.