Wednesday 19 October 2022

சக்தி வைத்தியம்

ஜானகிராமன் என்ற அமரத்துவம் பெற்ற கலைஞனின் அமரத்துவமான கதைகளில் ஒன்று ‘’சக்தி வைத்தியம்’’. 

இந்தக் கதையில் ஒரு குழந்தை வருகிறான். ‘’குழந்தை’’ என்றே தி.ஜா சொல்கிறார். பெயர் குறிப்பிடாதது ஒரு புனைவு உத்தி. உலகின் எல்லா குழந்தைகளும் அவனுடைய சாயலைக் கொண்டவை அல்லது உலகின் எல்லா குழந்தைகளின் சாயலையும் அவன் கொண்டிருக்கிறான். 

இந்திய மரபு எட்டு வயது வரை எல்லா குழந்தைகளும் ஒன்றே என்கிறது. அதாவது எட்டு வயது வரை எந்த குழந்தைக்கும் எந்த சமூக அடையாளமும் கிடையாது. சமூக அடையாளம் என்றால் இன்ன குடும்பத்துக்கு உரியது என்றோ இன்ன குலத்தைச் சேர்ந்தது என்றோ இன்ன கடமைகளைக் கொண்டது என்றோ எந்த நியதியும் கிடையாது. ஒரு ஊரில் ஒரு குழந்தை இருக்கிறது என்றால் அந்தக் குழந்தையின் மீது அன்பு செலுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த குழந்தையை எவரும் சீராட்டலாம். இதன் காரணமாக குழந்தை எல்லாரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளலாம். எட்டு வயது வரையிலான பாலபருவம் குழந்தைகளுக்கு விளையாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியது. எந்த ச்மூக அடையாளமும் சமூகப் பொறுப்பும் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்குக் கிடையாது. கிருஷ்ணன் அப்படித்தான் இருந்திருக்கிறான். ராமன் அப்படித்தான் இருந்திருக்கிறான்.  

‘’சக்தி வைத்தியம்’’ கதையில் வரும் சிறுவன் வீட்டையும் பள்ளியையும் பாடாய் படுத்துகிறான். ஆங்கில ரைம் களை வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தர் காதிலும் காட்டுக் கத்தலாய் கத்துவது தான் அவனது பிரத்யேகக் கொண்டாட்டம். கொல்லைக்கும் வாசலுக்கும் ஓடுவது கத்து கத்தென்று கத்துவது இதுதான் அவனது நித்யபடி வாழ்க்கை. மூன்று வயதுதான் ஆகிறது. சிறப்பாக ஓவியம் வரைகிறான். 

அவனது ஆங்கில ஆசிரியை ஒருநாள் அவனது வீட்டுக்கு வந்து அவன் அன்னையிடம் குழந்தையைக் கொஞ்சம் கண்டித்து வளருங்கள் என்று சொல்கிறாள். 

குழந்தையின் அன்னைக்கு மனது வலிக்கிறது. குழந்தையின் அன்னை ஏழு மகவுகளைப் பெற்றவள். அனைவருமே நுண்கலைகளில் சிறந்தவர்கள். மூத்த மகனுக்கு பதினாறு வயது . குழந்தைக்கு இப்போது மூன்று வயது. இன்னும் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. தனக்குத் தெரிந்த விதத்தில் நன்றாக வளர்த்திருக்கிறோமே ஆனால் இப்படி ஒரு பழி வந்து விட்டதே என வருத்தம் கொள்கிறான். ஆசிரியை புகார் சொல்லும் போது குழந்தை எங்கோ ஓடிச் சென்று விட்டான். திரும்பி வரும் போது ஒரு அட்டைப்பெட்டி நிறைய நந்தியாவட்டை மலர்களை கொண்டு வருகிறான். சுவாமிக்கு பூ கட்டிப் போடுங்கள் என்கிறான். அன்னை அவனை எண்ணி கண்களில் நீர்த்திரை கொள்கிறாள். 

சில நாட்கள் கழித்து , குழந்தையின் அன்னை ஆசிரியையைக் காண அவளது வீட்டுக்குச் செல்கிறாள். ஆசிரியையின் அன்னை ஆசிரியை குழந்தைகளையும் குடும்பத்தையும் பராமரிக்கும் விதம் குறித்து சோகமாக அங்கலாய்க்கிறாள். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு . ‘’ஒத்த புள்ள பெத்தவ எட்டு புள்ள பெத்தவளுக்கு பேறு பார்த்தது போல ‘’ என்று. அந்த பழமொழி இந்த சிறுகதையை வாசித்த போது நினைவில் வந்தது.