Wednesday 19 October 2022

நாய்க்கர் திருப்பணி

தமிழ்நாட்டு மக்களுக்கும் வினாயகருக்கும் உள்ள உறவு மிக அலாதியான ஒன்று. இன்றும் தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி இருக்கும் ஆலயங்களில் வினாயகர் ஆலயங்களே மிகுதி. விநாயகர் ஒரு செயல் துவங்கும் போது - துவங்கி நிகழ்த்தும் போது - ஏற்படும் விக்னங்களை நீக்கி செயல் சீராக நடைபெற உதவும் கடவுள். தமிழ்நாடு பெரும்பாலும் விவசாய நாடு. மழை, நீர் பாய்ச்சல், பனி, அறுவடை , ஆள் தேவை என பல விஷயங்களை நூறு நாட்கள் இடைவெளியில் தாண்டி பயிர் வளர்த்து அறுவடை செய்யும் வெள்ளாமையை மேற்கொள்ளும் நாடு. ஒவ்வொரு நிலையிலும் விக்னங்களைக் கடந்து வர வேண்டிய தொழில்முறை. எனவே விவசாயிகள் எப்போதும் விநாயகர் துணையை நாடுவார்கள்.  

வினாயகர் எங்கும் எளிதில் இருப்பார். ஆற்றங்கரையில் குளக்கரையில் வீதி முக்கில். வயலில் தோட்டத்தில் என எங்கும் எளிதில் பொருந்திக் கொள்வார். பிரதிட்டை பூசனை ஆகிய வழிமுறைகள் எளிதானவை. வினாயகருக்கு அருகம்புல் சாத்தினால் போதும். ஒரு தீபம் ஏற்றினால் போதும். தினசரி என்பது அவருக்குக் கணக்கில்லை. எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வெயில் மழை அவருக்கு ஒரு பொருட்டில்லை. 

தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சைப் பிராந்தியத்தில் ஒரு பழக்கம் உண்டு. எவரேனும் சிலர் வினாயகர் கோவில் கட்ட வேண்டும் என விரும்பினால் வெளியூரில் வெட்ட வெளியில் இருக்கும் வினாயகரை இவர்கள் ஊருக்குத் தூக்கி வந்து விடுவார்கள். வெளியூர் காரர்கள் பொழுது விடிந்து வினாயகர் இருக்கும் இடம் வெற்றிடமாக இருப்பதைக் கண்டால் வேறு வினாயகர் சிலையை செய்து பிரதிட்டை செய்து கொள்வார்கள். அவர்கள் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வினாயகரே முடிவெடுத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுவார்கள். அதனால் தான் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என அந்நிகழ்வைப் புரிந்து கொள்வது அவர்களின் வழக்கம். 

இந்த விஷயத்தைப் பின்புலமாகக் கொண்டு தி.ஜா எழுதிய சிறப்பான கதைகளில் ஒன்று நாய்க்கர் திருப்பணி.