Saturday 10 December 2022

உலக மனித உரிமைகள் தினம்

டிசம்பர் 10ம் தேதி ‘’உலக மனித உரிமைகள் தினம்’’. 

இந்தியாவில் அரசமைப்பில் உச்ச அதிகாரம் கொண்ட மேலிடம் என்பது அளவில் மிகவும் சிறியது. ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் அமையப் பெற்றிருக்கும் அரசு அலுவலகங்களே நாட்டின் குடிமக்கள் அரசுடன் தொடர்பு கொள்வதற்கான பொதுப்புள்ளிகள். இந்த அலுவலகங்களை நோக்கியே மக்கள் தினமும் ஏதேதோ காரணங்களுக்காக வருகிறார்கள். பெரும்பாலும் அரசு அலுவலகம் நோக்கி செல்வதை எவ்வளவு தள்ளிப் போட முடியுமோ அல்லது எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தள்ளிப் போடுகிறார்கள் அல்லது அவ்வளவு தவிர்க்கிறார்கள். அதற்குக் காரணம் அரசு அலுவலக ஊழியர்கள் குடிமக்களை நடத்தும் விதம். அரசு அலுவலகத்துக்கு ஒருமுறை சென்ற ஒருவர் மீண்டும் ஒருமுறை அங்கே படியேறக் கூடாது என எண்ணும் விதமான அனுபவத்தையே அடைகிறார். கசப்பான அனுபவம் குடிமக்களுக்கு கிடைக்கப் பெறுவதற்கு காரணம் அரசு ஊழியர்களின் லஞ்ச நாட்டம். லஞ்சத்தின் மீதான அரசு ஊழியர்களின் நாட்டமே பொதுமக்கள் ஏன அரசு அலுவலகத்துக்கு வருகிறார்கள் என எண்ண வைக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இடைத்தரகர்கள் மூலம் அணுகச் சொல்லி குடிமக்களிடம் எதிர்பார்க்கிறது. 

நம் நாட்டின் குடிமகன் அரசு அலுவலகத்தில் நடத்தப்படும் முறை என்பது மிகவும் மோசமானது. இந்த இழிவான நிலைக்குக் காரணம் அரசு அதிகாரிகள். 

கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள், நில அளவையாளர்கள், நகராட்சி வரி வசூலிப்பவர்கள் , குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள், வாகனப் பதிவு அதிகாரிகள், பத்திரப் பதிவுத் துறை போன்ற அலுவலகங்கள் குடிமக்களிடம் நடந்து கொள்ளும் முறை என்பது மிக மோசமானது. சாமானிய குடிமக்கள் இந்த அலுவலகங்களையே மிக அதிகம் தினமும் நாடுகிறார்கள். இந்த துறை அதிகாரிகளின் லஞ்ச நாட்டமே பொது மக்கள் தினமும் கசப்பான அனுபவத்தை அடையக் காரணமாகிறது. இந்த கசப்பான அனுபவத்தை ஒரு முறையேனும் பெற்ற ஒருவர் மீண்டும் அரசமைப்பு குறித்து நல்ல அபிப்ராயம் கொள்ள வாய்ப்பில்லை. 

லஞ்சமும் ஊழலும் மனித உரிமைகளுக்கு எதிரானவை. 

லஞ்ச ஊழல் இல்லாத நிர்வாகத்தில் தான் மனித உரிமைகள் காக்கப்பட முடியும்.