Monday 12 December 2022

தொழில்முனைவோன் படும் பாடு

 விக்டர் ஹியூகோ எழுதிய நாவலின் பெயர் ‘’லெஸ் மிஸரபிள்ஸ்’’. தமிழில் அது ‘’ஏழை படும் பாடு’’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் வாரத்தின் முதல் நாளான ஒரு திங்கள் கிழமை தொடங்கும் போது சுயதொழில் புரியும் தொழில் முனைவோர்கள் படும் பாடு என்பது சொல்லி மாளாதது.  

இங்கே மாநில அரசு அலுவலகங்கள் தங்கள் முன் வரும் ஒரு காகிதத்தை அல்லது ஒரு மனுவை அல்லது ஒரு கோப்பை அல்லது ஒரு வேலையை எவ்விதம் செய்யாமல் ஒத்தி வைப்பது என்பதைப் பழகியிருப்பார்கள். உண்மைக்கு மாறான விஷயங்களைக் கூற பழகியிருப்பார்கள். வந்திருப்பவனைக் குழப்புவதற்கு என்னவெல்லாம் கூற வேண்டுமோ அதனையெல்லாம் சொல்வார்கள். ஒரு வாரம் துவங்குகையில் அங்கே சென்று நிற்பது என்பது அந்த வாரத்தையே ஒளியிழக்கச் செய்து விடும். 

பட்டா மாற்றம் செய்ய, சொத்து வரி பெயர் மாற்ற , நிலம் அல்லது மனையை அளந்து கொடுக்க , காலிமனை வரி விதிக்க என இவர்கள் கேட்கும் லஞ்சத் தொகை என்பது பெரும் அளவிலானது. நூறு ரூபாய் அரசுக்கட்டணம் எனில் அவர்கள் கேட்கும் லஞ்சம் என்பது ஐயாயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. 

பல ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரிகள் லஞ்சப் பணத்தை நேரடியாக கேட்டு வாங்கிக் கொள்வார்கள். இப்போதெல்லாம் லஞ்சப் பணத்தை குடிமக்களிடம் வாங்கி அதிகாரிகளுக்குக் கொடுக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. அந்த அரசு அலுவலகத்தின் தற்காலிக ஊழியர்கள். இவர்கள் பணம் பெறுவதால் இவர்கள் தங்களை அதிகாரிக்கும் மேலாக கருதிக் கொண்டு மக்களை அலைக்கழிக்கிறார்கள். 

ஒரு மாநிலத்தில் தொழில்வளம் பெருக வேண்டும் எனில் அந்த மாநிலத்தில் லஞ்சம் தராமல் சாமானியர்களின் சாதாரண வேலைகள் நிகழ்கின்றன என்ற நிலை இருக்க வேண்டும். அது இப்போது தமிழ்நாட்டில் இல்லை.