Saturday 31 December 2022

ஆண்டு நிறைவு

தை மாதத்தில் ஒரு கட்டுமானப் பணியைத் துவக்குகிறேன். அந்த மனையில் புல் மண்டி இருந்தது. எனது நண்பர் ஒருவர் ’’ஸ்வதர்மா கோசாலை’’ என்ற கோசாலையை நடத்தி வருகிறார். அதில் கிர், காங்கரேஜ், தார்பார்க்கர் வகை நாட்டு மாடுகள் இருபது உள்ளன. நண்பர் ரசாயன உரங்கள் இல்லாமல் முற்றிலும் பசுஞ்சாணத்தை உரமாகப் பயன்படுத்தி விவசாயம் செய்கிறார். அவ்வப்போது அந்த கோசாலைக்கு நான் செல்வதுண்டு. 

இன்று ஆண்டின் நிறைவு நாள் என்பதால் நினைவில் நிற்கும் விதமாக ஏதேனும் செயல் புரியலாம் என எண்ணினேன். கட்டுமான இடத்தில் வளர்ந்திருக்கும் புல்லை அறுத்துக் கொண்டு போய் கோசாலையில் உள்ள மாடுகளுக்குக் கொடுக்கலாம் என எண்ணினேன். புல் அறுக்கும் இரண்டு அரிவாள்களை ஏற்பாடு செய்து கொண்டு மனைக்குச் சென்றேன். உதவிக்கு ஒரு நண்பரும் வந்திருந்தார். இருபது மாடுகளுக்குத் தேவையான அளவு கணிசமான புல்லை அறுத்துக் கொண்டோம். நண்பர் பெரிய அளவில் உதவினார். சாக்குப்பையில் புல்லைக் கட்டி எடுத்துக் கொண்டேன். இரு சக்கர வாகனத்தில் ஸ்பீடாமீட்டர் பெட்ரோல் டேங்க் மேல் சாக்குப்பையை வைத்தேன். கட்டுமானத் துறையில் இருப்பதால் எந்த பொருளையும் வண்டியில் கட்டி எடுத்துச் செல்லும் பழக்கம் உண்டு. வழக்கமாக செல்லும் வேகத்தைக் குறைத்துக் கொண்டால் எத்தனை எடை கொண்ட பொருளாக இருந்தாலும் எடுத்துச் சென்று விடலாம். கோசாலைக்கு சென்று அங்கே உள்ள மாடுகளுக்கு புல்லை அளித்தேன். கட்டுமான இடத்தில் இன்னும் நிறைய புல் இருப்பது நினைவுக்கு வந்தது. நாளை பணியாளர் எவரையேனும் காலைப் பொழுதில் நியமித்தால் அங்கே உள்ள புல் அத்தனையையும் அறுத்து கோசாலை மாடுகளுக்கு அளிக்கலாம் என்று தோன்றியது. ஏதாவது ஒன்றை செய்யத் துவங்கினால் அது அடுத்த பணிக்கான துவக்கத்தை தானே உருவாக்கி விடும். இதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். 


 3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டிருக்கும் நண்பரின் வயலுக்குச் சென்றேன். நண்பரும் நானும் சேர்ந்து மழைக்காலம் முடிந்ததற்குப் பின்னால் இருக்கும் நிலை குறித்து தேக்குக் கன்றுகளை ( இப்போது மரங்கள் என்று சொல்ல முடியும்) பார்வையிட்டவாறு விவாதித்தோம். 


பசுக்கள் மனிதர்களிடம் மிகவும் பிரியம் மிகுந்த ஜீவன்கள். அவற்றுடன் செலவிட்ட நேரம் என்பது மனத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனால் ஆண்டு நிறைவு இனிமையாய் அமைந்தது.