Friday 30 December 2022

மாநதி

இன்று ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணக் கட்டுரையை வாசித்து விட்டு ஒரு வாசகர் அலைபேசியில் அழைத்து தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். நம் நாட்டில் நாம் இந்தியர்கள் நம்மால் முழுமையாக வகுத்துக் கூறி விட இயலாத விதத்தில் நம் மண்ணுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளோம். பூமாதேவி நம் மீது எப்போதும் கருணையும் பிரியமும் காட்டும் தெய்வம் என்பதை மகவாயிருப்பதிலிருந்து கேட்டு வளர்கிறோம். நமது மரபு நம் மண்ணை நம் நிலத்தை நம் கிராமத்தை நம் நகரத்தை நம் நாட்டைக் ‘’கர்ம பூமி’’ என்கிறது. செயல்களால் உயிரின் நிறைநிலையை உணரச் செய்யும் பூமி. நம் நாட்டில் காலை எழுந்தவுடன் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏழு நதிகளை நினைத்துக் கொள்ளச் சொல்வார்கள். கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி. நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏழு நகரங்களை நினைத்துக் கொள்ளச் சொல்வார்கள். அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்தி துவாரகா. 

பாரதி நம் நாட்டைப் பற்றிக் கூறுகையில் ‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறான். இமயம் முதல் குமரி வரை இந்த நாட்டின் ஒவ்வொரு துளியும் அதனை உறுதி செய்கிறது.