Sunday 1 January 2023

துவக்கம்


 இன்று முற்பகலில் சில லௌகிகப் பணிகள் இருந்தன. அவற்றை மேற்கொண்டேம். பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் மூன்று பணியாளர்கள் வீட்டுக்கு வந்தனர். மதியம் ஒரு மணி வரையில் ஒரு வீட்டில் தோட்ட வேலை செய்து விட்டு அந்த பணி நிறைவு பெற்றதும் மதிய உணவருந்தி விட்டு வீட்டுக்கு வந்தனர். நான் அவர்களை என்னுடைய கட்டுமான மனைக்கு விலாசம் சொல்லி அனுப்பினேன். சிறிது நேரத்தில் நானும் சென்று சேர்ந்தேன். மண்டியிருக்கும் புல்லை அறுத்து முடித்து விட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன். நான்கு மணி அளவில் ஃபோன் வந்தது. நேற்று வந்து புல் அறுக்க உதவிய நண்பரை அழைத்துக் கொண்டு எனது மாருதி ஆம்னியில் சென்றேன். அறுத்த புல்லை ஆம்னியின் பின் சீட்டில் முழுமையாகத் திணித்தோம். இருபது மாட்டுக்கும் போதுமான அளவு புல் இருந்தது. பணியாளர்களுக்கு ஊதியம் அளித்து அனுப்பி விட்டு கோசாலைக்குப் புறப்பட்டோம். மாடுகள் என்னைப் பார்த்தவுடன் ஆர்வத்துடன் குரல் எழுப்பின. கவணையில் புல்லை நிரப்பினோம். உற்சாகமாக புல்லைத் தின்றன. பசுக்களுக்கு புல்லை அளிப்பதைக் காட்டிலும் ஒரு புதிய விஷயத்தை துவங்க மேலான இன்னொரு வழி இருக்கிறதா என்ன?