Friday 11 August 2023

நாடக மேடை

ஷேக்ஸ்பியரின் பிரபலமான வரி ‘’ உலகம் ஒரு நாடக மேடை’’. அவர் என்ன சொல்கிறார் . இந்த உலகம் காட்சிகளால் ஆனது என்றா? எத்தனை எத்தனை காட்சிகளும் உணர்ச்சிகளும் நிரம்பிய மேடை. இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதைப் புரிந்து கொண்டவன் இந்த உலகைக் காணும் விதம் தனித்துவம் கொண்டதாயிருக்குமா? காட்சிகள் மாறுகின்றன. காலம் கதாபாத்திரங்களை உருவாக்குகிறது. பின்னர் காலம் அந்த கதாபாத்திரங்களை வெளியே அனுப்பி விட்டு புதிய கதாபாத்திரங்களை உள்ளே கொண்டு வருகிறது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுவயது, முதுமை என ஒரு கதாபாத்திரமே வெவ்வேறு வேடம் பூணுகிறது. 

கவிஞன் எளிதாகக் கூறி விட்டான் ‘’நாடக மேடை’’ என. அந்த மேடையில் நவரசங்களும் அரங்கேறுகின்றன. புன்னகைத்திருப்பவர்களும் உண்டு. மகிழ்ச்சிப் பெருக்கில் திளைப்பவர்களும் உண்டு ; துயருறுபவர்களும் உண்டு. 

லட்சோப லட்சத்தில் ஒருவர் தான் எந்த வேடமும் பூணாமல் உலகின் ஒட்டுமொத்த நாட்கத்தையும் காண்கிறார். அந்த ஒருவருக்காகவே இந்த ஒட்டுமொத்த நாடகமும் நடக்கிறது.