Sunday 27 August 2023

சிவசக்தி

சொல்லும் பொருளும் இணைவது போல சிவனும் சக்தியும் இணைகிறார்கள். காளிதாசன் அம்மையப்பனாகிய சிவசக்தியை சொல்லின் பொருளுக்காக வணங்குகிறான். 

- ரகுவம்ச காவியத்தின் முதல் பாடல்

இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பாலும் கூட்டு முயற்சியாலும் சந்திர மண்டலத்தில் இந்தியாவின் ‘’விக்ரம்’’ நிலைகொண்டு ‘’பிரக்ஞான்’’ நிலவில் ஆய்வு மேற்கொண்டு தரவுகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்கிய இஸ்ரோ அமைப்பும் இஸ்ரோ அமைப்பின் நிலவு ஆய்வுப் பணிகளுக்கு தடையின்றி நிதி கிடைப்பதை உறுதி செய்த மத்திய அரசும் பாராட்டுக்குரியவர்கள். 

பல்வேறு உலக நாடுகள் வெவ்வேறு விதங்களில் இஸ்ரோவின் திட்டங்களை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்வார்கள் என்பது எளிதில் யூகிக்கக் கூடிய ஒன்றே. அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது என்பதாலேயே இந்த சாதனை சாத்தியமாகியிருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்த உறுதியுடன் செயல்பட்ட இஸ்ரோவின் ஒவ்வொரு விஞ்ஞானியும் தனித்த முக்கியத்துவம் கொண்டவர்கள். 

கோடானுகோடி மனிதர்களை மகிழச் செய்வது என்பதும் பெருமிதம் கொள்ளச் செய்வது என்பதும் ஓர் அருஞ்செயல். அது நிகழ்ந்திருக்கிறது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உரியது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நம் நாடு அளித்திருக்கும் பரிசு இந்த சாதனை.