Thursday 14 September 2023

தமிழகத் தொழிலாளர்கள்

 சென்ற வாரம் நண்பன் கே. எஸ் ஐ சந்திக்க சிதம்பரம் சென்றிருந்த போது அங்கே அவனது உறவினர்களிடம் தென்னாற்காடு மாவட்டத்தின் மக்கள் கடுமையான உழைப்பாளிகள் என்ற எனது அபிப்ராயத்தைத் தெரிவித்தேன். அங்கே நில உரிமையாளர் விவசாயத் தொழிலாளர் இருவருமே ஒன்றாக நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்வார்கள். நில உரிமையாளர்களின் குடும்பத்துப் பெண்களும் வயலுக்கு வந்து களையெடுத்தல் முதலிய பணிகளை மேற்கொள்வார்கள். நான்கு சக்கர வாகனங்களைக் கையாள்வதில் தென்னாற்காடு மாவட்ட ஆட்கள் நிபுணர்கள். பேருந்து ஓட்டுனர்களாக சிறப்பான பணிகளைச் செய்தவர்கள் தென்னாற்காடு வாகன ஓட்டுனர்கள். எனது அபிப்ராயங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நண்பன் கே.எஸ் ன் உறவினர். அவரது மாவட்டத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் சொன்னது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. எனினும் சற்று சோர்வுடன் , ‘’ நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் தம்பி. ஆனால் அதெல்லாம் இருபது வருடம் முன்பு’’ என்றார். ‘’இப்போதெல்லாம் இங்கே உள்ள பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்களில் உள்ள ஆண்களில் குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இருவர் குடி அடிமைகளாக இருக்கின்றனர். அவர்களால் சராசரியான உடல் உழைப்பைக் கூட கொடுக்க முடிவதில்லை. எனவே அவர்களின் பணித்திறன் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு கட்டுமானம் மேற்கொண்டேன். முழுக்க முழுக்க வட இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானம் நடந்தது ‘’ என்றார்.