Saturday 14 October 2023

பள்ளி வளாகம் - சட்ட விரோத மரம் வெட்டுதல் - புகார்

 இன்று பணி நிமித்தம் ஒரு கிராமத்துக்குச் செல்ல நேர்ந்தது. அந்த கிராமத்தில் இருந்த அரசுப்பள்ளியொன்றின் வளாகத்தில் இருந்த உயிர் மரத்தை இரும்பு ஆயுதங்கள் , இரும்புக் கருவிகள், கட்டிங் மெஷின், டிராக்டர் இவற்றைப் பயன்படுத்தி வெட்டிக் கொண்டிருந்தார்கள். அதனைக் காண நேர்ந்தது. அவர்கள் மரம் வெட்டத் துவங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருக்கலாம் என அங்கிருந்த சூழல் காட்டியது. அந்த பகுதியின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அங்கிருந்து பத்து நிமிட பயண தூரத்தில் இருந்ததால் உடன் அங்கு சென்று பள்ளி வளாகத்தில் நடக்கும் விஷயத்தைக் கூறி மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்துமாறு கூறினேன். 

வீட்டுக்கு வந்து இது குறித்த ஒரு புகார் மனுவைத் தயாரித்து அனுப்பினேன். அதன் மொழிபெயர்ப்பைக் கீழே அளித்துள்ளேன். தமிழகத்தில் , அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் அனுப்பப்படும் புகார் மனுக்கள் சற்று மேலதிக கவனத்துடன் அணுகப்படுகின்றன என்பது ஒரு நடைமுறை உண்மை. நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படலாம் என்னும் சாத்தியக்கூறு அந்த மேலதிக கவனத்தை உருவாக்குகிறது. 

*******

அனுப்புநர்

&&&&&&

பெறுநர்

1. மாவட்ட ஆட்சியர்

2. வருவாய் கோட்டாட்சியர்

3. வட்டாட்சியர்

4. மாவட்டக் கல்வி அதிகாரி

ஐயா,

பொருள் : சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் குறித்த புகார்

பார்வை : ஊராட்சி ஒன்றியப் பள்ளி, &&&&& கிராமம், 14.10.2023

14.10.2023 அன்று , 11 மணி அளவில், மயிலாடுதுறை மாவட்டம், &&&&&& வட்டம், &&&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இருந்த மரம் தோராயமாக 7 நபர்களால் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இரும்பு ஆயுதங்கள், இரும்பு உபகரணங்கள், கட்டிங் மெஷின் மற்றும் டிராக்டர் ஆகியவை அவர்களால் மரம் வெட்ட பயன்படுத்தப்பட்டன. மரத்தின் கிளைகளை இழுக்க டிராக்டர் பயன்பட்டது. இந்த காட்சியை நான் அப்பகுதியைக் கடந்த போது கண்டேன். 

அதிர்ச்சியடைந்து நடந்த சம்பவத்தைக் குறித்து கூற வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். அங்கிருந்த ஊழியர்களிடம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் செயல் குறித்து கூறி அதனைத் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அங்கிருந்த ஊழியர்கள் வருவாய் ஆய்வாளரை அலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறி மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கையை உடன் மேற்கொள்ளுமாறு கூறினர். 

மேற்படி பள்ளி வளாகத்தில் மரம் வெட்ட வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பதை விசாரித்து அறியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

அவ்வாறு அனுமதி பெறப்படவில்லையெனில் அங்கே மரம் வெட்டப்பட்டது ஒரு கிரிமினல் குற்றம் ஆகும். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மரம் வெட்டியவர்கள், டிராக்டர் ஓட்டுநர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாவர். சட்டபூர்வமான நடவடிக்கை அவர்கள் மேல் மேற்கொள்ளப்பட வேண்டும். 

முதன்மையாக , கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு அளிக்கப்படும் ‘’சி’’ படிவம் உரிய விதத்தில் அளிக்கப்பட வேண்டும். உச்சபட்சமான அபராதம் விதிக்கப்பட வேண்டும். மரம் வெட்டுதலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர் வருவாய்த்துறையால் பறிமுதல் செய்யப்பட வேண்டும். 

இந்த மனுவின் மூலம், நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறும் குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் வருவாய்த்துறையை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

தங்கள் உண்மையுள்ள,

*****

இடம் : 

நாள் : 14.10.2023