Thursday 21 December 2023

பணிகளும் பயணங்களும்

என்னுடைய இளம் வயதிலிருந்தே எனக்கு நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவே என்னை ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ செல்ல வைத்தது. மோட்டார்சைக்கிளில் மேற்கொண்ட அப்பயணமே என் அகத்தைக் கிராமங்களுக்கான பணியை நோக்கி இட்டுச் சென்றது. 

இப்போது என் அகம் இரண்டு கனவுகளைக் காண்கிறது. கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கனவு. இன்னும் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூர பயணங்கள் குறித்த கனவு. 

பொதுவாக வாசிக்கும் ஏதாவது ஒரு நூலிலிருந்து நீண்ட தூரப் பயணத்துக்கான தூண்டலைப் பெறுவது எனது வழக்கம். இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணங்கள் என நான் எண்ணுவதைப் பட்டியலிடுகிறேன். இவை நிகழ வேண்டும் என்பது எனது பேராவல். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளும் பொதுப் பணிகளும் சூழ்ந்துள்ளன. ஒரு கூட்டத்தில் யானை தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்வதைப் போல நான் கனவு காணும் பெரும் பயணங்கள் தனக்கான துவக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் என்பதை ஒரு பயணியாக நான் உணர்கிறேன். 

1. தொண்டை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

2. பாண்டிய நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

3. மலை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

4. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் மேற்கொண்ட ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலில் உள்ள தலங்கள் நோக்கி ஒரு பயணம். ( பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி கரைகளில் உள்ள ஆலயங்களை நோக்கிய பயணம்)

5. வட நாட்டு திவ்ய தேசங்களுக்கான ஒரு பயணம்

6. ஆந்திரா தெலங்கானா மாநிலங்களில் மட்டும் ஒரு பயணம்

7. தமிழகத்தில் தொடங்கி குஜராத் சென்று அங்கிருந்து காஷ்மீர் சென்று முழு உத்திரப்பிரதேசத்திலும் பயணித்து வங்காளம் வழியே அஸ்ஸாம் சென்று வடகிழக்கு மாநிலங்களில் பயணித்து மீண்டும் வங்காளம் வந்து அங்கிருந்து ஒரிஸ்ஸா வழியே கிழக்குக் கடற்கரை வழியாகப் பயணித்து ஆந்திரா வழியே தமிழகம் வந்தடையும் பயணம். 

8. நர்மதா நதி வலம்

9. கோதாவரி நதியின் கரையில் பயணிக்கும் ஒரு பயணம். 

எந்த ஒரு நீண்ட நெடிய பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கற்றுத் தருவது அதையே.