Saturday 3 February 2024

இரு சம்பவங்கள் ( நகைச்சுவைக் கட்டுரை)

சம்பவம் 1 :

இது நடந்து 15 ஆண்டு காலம் இருக்கும். 

அப்போது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறும். புத்தகக் கண்காட்சிக்கு அந்த இடம் மிகவும் உகந்த வசதியான இடம். வேறெந்த இடத்தை விடவும். 

அமைப்பாளரின் நண்பர் ஒரு பதிப்பக உரிமையாளர். நண்பருக்கு உதவி செய்ய அமைப்பாளர் சென்னை புத்தகக் கண்காட்சி செல்வார். புத்தகங்கள் அடுக்கும் ’’ரேக்’’ ஐ வாடகைக்கு எடுத்துக் கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு முதல் நாள் செல்வதிலிருந்து புத்தகக் கண்காட்சி முடியும் கடைசி நாள் வரை அமைப்பாளர் நண்பருடன் உடனிருந்து உதவுவார். 

கண்காட்சி நடக்கும் 10 நாட்களும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து புத்தகம் வாங்கி செய்திப்பத்திரிக்கைகள்  அதனை செய்தியாகப் போட்டு புதிய நூல்கள் வெளியாகி விற்பனை செய்யப்பட்டு என ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறும். 

கண்காட்சி நிறைவு பெற்றதற்கு மறுநாள் புத்தகங்களை அட்டைப்பெட்டிகளில் அடுக்கி ‘’ரேக்’’அனைத்தையும் பிரித்து வைத்து விட்டு டாடா ஏசில் ஏற்றி அனுப்பி விட்டு பார்க்கிங் பகுதியில் உள்ள டூ வீலரை எடுத்துக் கொண்டு வரும் நண்பருக்காக அமைப்பாளர் காத்துக் கொண்டிருந்தார். 

அப்போது ஒரு இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் சாலையிலிருந்து டூ வீலரில் வந்தார்.   பள்ளி வாயிலில் நின்று கொண்டிருந்த அமைப்பாளரிடம் , ‘’சார் ! புக் ஃபேர் இங்க தானே நடக்குது?’’ என்றார். 

அமைப்பாளர் ‘’நடந்தது’’ என்றார். 

இளைஞர் ‘’ அப்ப முடிஞ்சுடுச்சா?’’ என்றார் நம்ப முடியாமல். 

அமைப்பாளர் ‘’ஆமாம்’’ என்றார்.

’’இனிமே எப்ப?’’ என்றார் இளைஞர். 

‘’அடுத்த வருஷம் ஜனவரியில்’’ என்றார் அமைப்பாளர். 

இளைஞர் சோர்வுடன் சென்று விட்டார். 

அமைப்பாளர் கல்லூரியில் படித்த போது ஒரு பேராசிரியர் மாணவர்கள் எவரும் தாமதமாக வந்தால் ‘’You are too early to the next class'' என்று கூறுவார். அமைப்பாளருக்கு அந்த ஞாபகம் வந்தது. 

***

சம்பவம் 2 :

இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னால் நடந்தது. 

அமைப்பாளர் வங்கிச் சாளரத்தின் முன் இருந்த ‘’கியூ’’வில் நின்று கொண்டிருந்தார். அமைப்பாளருக்கு முன் ஒரு இளைஞர் நின்றார். வயது 30 இருக்கும். காசோலை ஒன்றை பணமாக்க வந்திருந்தார். அதற்கான டோக்கன் அவரிடம் இருந்தது. 

இளைஞர் டோக்கனை சாளரத்தினுள் கொடுத்து காசாளரிடம் ‘’அமௌண்ட்டை ஹையர் டினாமிஷேன் நோட்டா கொடுங்க’’ என்றார். 

காசாளர் ஒரு 500 ரூபாய் கட்டைக் கொடுத்தார். 

இளைஞர் காசாளரிடம் ‘’ஹையர் டினாமினேஷன்’’ என்றார். 

காசாளர் இளைஞரிடம் ‘’அப்படித்தானே கொடுத்திருக்கன்’’ என்றார். 

இளைஞர் ‘’சார் ! ரெண்டாயிரம் நோட்டா கொடுங்க’’ என்றார். 

காசாளர் அமைதியாக ‘’ இப்ப இந்தியால ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்துல இல்ல’’ என்றார். 

***