எனது வாழிடத்தின் அருகே எனது வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி ஒரு முதியவர் வசிக்கிறார். உயரமான தோற்றம் கொண்டவர். சிரித்த முகத்துடன் இருப்பவர். அவர் வயது 80 இருக்கும். மாலை அந்தியில் தோராயமாக 4.30 அளவில் அருகில் இருக்கும் கணபதி ஆலயத்துக்குச் செல்வார். நான் அவரைத் தாண்டிச் சென்றால் ‘’என்னுடன் பைக்கில் வருகிறீர்களா?’’ என்று எப்போதும் கேட்பேன். ஆலயத்துக்குச் சென்றால் ‘’இது ஈவ்னிங் வாக்கிங் தம்பி’’ என்பார். கடைத்தெரு செல்வதாக இருந்தால் என்னுடன் வருவார்.
பொதுவாக ஏதாவது சொல்வார். எதிர்மறையாக எப்போதும் பேச மாட்டார். அவரது அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நேற்று என்னிடம் , ‘’தம்பி ! ஜன் ஔஷதி க்கு போறேன் தம்பி’’ என்றார்.
நான் ‘’அப்படியா சார்!’’ என்றேன்.
‘’எனக்கு பேஸ் மேக்கர் வச்சிருக்கு தம்பி. மாசம் என்னோட மெடிக்கல் பில் 5000 ரூபாய் வரும். ஜன் ஔஷதி ஷாப் வந்ததும் அதே மெடிசன் இப்போ 500 ரூபாய்க்கு கிடைக்குது. எனக்கு மாசம் 4500 மிச்சம் தம்பி. பத்து வருஷமா அங்க தான் மருந்து வாங்கறன்’’ என்றார்.