Sunday 5 May 2024

இன்னொரு தேக்கு தோட்டம்


 எனது நண்பரான ஐ டி கம்பெனி ஊழியர் தனது 3 ஏக்கர் நெல் வயலை தேக்குத் தோட்டமாக மாற்றினார். இப்போது தேக்கு மரங்கள் அங்கே நல்ல முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்ட நாளிலிருந்து இன்று வரை வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. வாரத்துக்கு இரண்டு நாட்களாவது நீர் விட வேண்டும் என்ற விஷயத்தைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். நண்பரும் அதனை முறையாக கடைப்பிடிக்கிறார். நண்பரின் வயலிலிருந்து 100 அடி தூரத்தில் அவருடைய உறவினர் ஒருவரின் நெல் வயல் இருக்கிறது. நண்பரின் தேக்குத் தோட்ட முயற்சியைக் கண்ட உறவினர் தனது வயலில் முழுமையாக தேக்கு நட முடிவெடுத்துள்ளார். உறவினரின் வயல் 5 ஏக்கர் பரப்பு கொண்டது. 

ஐந்து ஏக்கர் வயலின் நடுப்பகுதியில் நீளமான ஒரு பண்ணைக்குட்டை வெட்டி அந்த மண்ணைக் கொண்டு முழு வயலும் 2 அடி உயரம் உயர்த்தப்படுகிறது. தண்ணீர் எளிதில் வடிய நிலத்தை உயர்த்துவது பயனளிக்கும். நீர் பாய்ச்சவும் எளிதாக இருக்கும். 

ஒரு விவசாயி ஒரு வலிமையான பொருளியல் சக்தியாகவும் திகழ வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

ஒவ்வொன்றாகக் கூடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் வலிமை கொண்டவர்களாக ஆக்க வேண்டும் என்ற பெருவிருப்பின் பிரம்மாண்டம் மலைக்கச் செய்கிறது.