Friday 3 May 2024

சிறப்பு விற்பனை ( நகைச்சுவைக் கட்டுரை)

 அமைப்பாளர் மூன்று தினங்களுக்கு முன்னால் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் ஓர் அறிவிப்பைப் பார்த்தார். அதாவது, சென்ற மழைக்காலத்தில் சென்னையில் மழைநீர் பலநாட்கள் வடியாமல் இருந்த போது தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனில் மழைநீர் புகுந்து புத்தகங்கள் நனைந்தன. திடீரென ஏற்பட்ட இந்நெருக்கடியை சமயோசிதமாகக் கையாண்டு நனைந்த புத்தகங்களை அதிக சேதாரம் இல்லாமல் உலர்த்திக் காத்தனர். இவ்விதமான நூல்கள் சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பு எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் வெளியாகியிருந்தது. வெள்ளியன்று மாலை 5.30லிருந்து 8.30 வரை இந்த சிறப்பு விற்பனை நிகழும் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அமைப்பாளர் சென்னை செல்லத் திட்டமிட்டார். வழக்கம் போல், தவிர்க்க இயலாத சில லௌகிகப் பணிகள். போக முடியாமல் ஆகி விடும் என அவரின் உள்ளுணர்வு கூறியது. எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணினார். 

வங்கி மேலாளரான தனது இளவலுக்கு ஃபோன் செய்தார். 

‘’தம்பி ! தேசாந்திரி ஸ்பெஷல் சேல் போட்டுறுக்காங்க. எஸ். ரா தளத்தைப் பாரு. நான 5 நிமிஷம் கழிச்சு பேசறன்’’

மூன்று நிமிடத்தில் தம்பி கூப்பிட்டான். 

’’அண்ணன்! ரூ. 100 ரூ.200ன்னு ரெண்டு கேட்டகிரில புக்ஸ் இருக்கு. நாம தேசாந்திரிக்கு ஃபோன் செஞ்சு தபால்ல அனுப்ப சொல்லுவோமா?’’ 

‘’தபால்ல அனுப்புவாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்கு. ரூ.100 புக் அனுப்ப ரூ.50 செலவாகிடும். அதனால தான் ஸ்பெஷல் சேல் போட்டிருக்காங்க. அப்புறம் கொஞ்சம் டேமேஜ் ஆன புக் ஒரு வாசகர் பாத்து எடுக்கும் போது அது அவராவே எடுக்கறது. ஆனா தபால்ல வந்தா இன்னும் பெட்டர் காப்பி இருந்தா நல்லா இருக்கும்னு தோணும் இல்லயா. இட்ஸ் ஹியூமன்’’

‘’ஆமா அண்ணன் . நீங்க சொல்ற ஆங்கிள் கரெக்ட் தான்’’

‘’நாம யாரையாவது அனுப்பி வாங்க சொல்லணும். யாரை அனுப்பலாம்?’’

‘’திராத் அப்பா தான் கரெக்ட் சாய்ஸ். நீ விஷயத்தை எக்ஸ்பிளைன் பண்றியா?’’ 

‘’அண்ணன் ! திராத்துக்கு அன்னைக்குத் தான் நாமகரணம். அன்னைக்கு முழுக்க அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப பிஸியா இருப்பாங்க’’

’’வேற யார் பொருத்தமா இருப்பாங்க?’’

’’என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் வீடு கும்மிடிப்பூண்டில இருக்கு’’

‘’இல்ல அது ரொம்ப தூரம் சரியா வராது. நான் யோசிக்கறன். நீயும் யோசி’’

கிழக்குக் கடற்கரை சாலையில் அடையாருக்கும் மாமல்லபுரத்துக்கும் நடுவில் வசிக்கும் எழுத்தார்வம் கொண்ட இலக்கிய வாசகரான தனது நண்பருக்கு ஃபோன் செய்தார் அமைப்பாளர். நண்பர் ஐ டி கம்பெனியில் பணி புரிபவர். ஒரு மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது ; ஒரு மணி நேரம் கழித்து அழைக்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினார். கூறியபடி அழைத்தார். அமைப்பாளர் விபரம் சொல்ல 90 சதவீதம் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார் நண்பர். 

அடுத்த நாள் வங்கி மேலாளருக்கு ஃபோன் செய்து ‘’ தம்பி ! யாரை அனுப்பலாம்னு யோசிச்சயா?’’ என்றார். 

மேலாளர் யோசிக்கவில்லை என பதில் சொல்ல அமைப்பாளர் இந்த விஷயத்தை மனசுல யோசிச்சுட்டே இரு. அப்பதான் நடக்கும் என்றார். 

ஈ சி ஆர் நண்பருக்கு அமைப்பாளர் காலையில் ஃபோன் போட்டார். சாயந்திர நிகழ்வை ஞாபகப்படுத்தினார். ‘’ஞாபகம் இருக்கு. நாலு மணிக்கு நான் அங்க இருப்பன்’’

நான்கு முப்பதுக்கு நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. ‘’வென்யூக்கு இன்னும் 10 நிமிஷத்துல போயிடுவன்.’’

நண்பர் அங்கு சென்றதும் அமைப்பாளர் ஃபோன் செய்து ’’ரூ. 100 லிஸ்ட்ல உள்ள புக்ஸ் என்னென்னன்னு சொல்லுங்க. ரூ. 200 லிஸ்ட்ல உள்ள புக்ஸ் என்னென்னன்னு சொல்லுங்க. எழுதிக்கறன்’’ என்றார். நண்பர் அங்கே உள்ள புத்தகங்களைப் பார்த்து சொன்னார். 

அமைப்பாளர் அவற்றைப் பரிசீலித்து , ’’மேற்கின் குரல், ஆயிரம் வண்ணங்கள், கேள்விக்குறி, தேவமலர், சித்தார்த்தா, எழுத்தே வாழ்க்கை, வீடில்லாப் புத்தகங்கள் ‘’ என ஏழு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ஃபோனில் சொன்னார். 

வங்கி மேலாளருக்கும் பட்டியலைச் சொல்ல அவர் , ‘’மேற்கின் குரல், பறவைக் கோணம், நான்காவது சினிமா, தேவமலர், சித்தார்த்தா, எழுத்தே வாழ்க்கை, அரூபத்தின் நடனம்’’ ஆகிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார். 

ஈ சி ஆர் நண்பர் , ‘’மேற்கின் குரல், ஆயிரம் வண்ணங்கள், தேவமலர், நாவலென்னும் சிம்பொனி, சித்தார்த்தா, 18ம் நூற்றாண்டின் மழை’’ ஆகிய நூல்களை தெரிவு செய்திருந்தார். 

கணித்தத்தில் செட் லாங்க்வேஜ் என்ற பிரிவில் வென் வரைபடங்கள் என ஒரு பிரிவு இருக்கும். அதில் ஏ யூனியன் பி யூனியன் சி என மூன்றுக்கும் பொதுவான பரப்பு அடையாளப்படுத்தப்படும். மூன்று பேர் தேர்ந்தெடுத்த புத்தகங்களிலும் அவ்வாறான பொது ரசனைப் பரப்பு இருப்பதாக அமைப்பாளர் எண்ணினார். 

அமைப்பாளர் எடுத்த புத்தகங்கள் ரூ.800 மதிப்புடையவை. இளவல் எடுத்த புத்தகங்களும் ரூ.800 மதிப்புடைய்வை. ரூ. 1600 யு.பி.ஐ மூலம் இளவலால் அனுப்பப்பட்டது. நண்பர் புத்தகங்களுடன் ஈ சி ஆரில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டார். 

வங்கி மேலாளர் அமைப்பாளரிடன் ‘’ அண்ணன் ! இந்த புக்ஸ்ஸை எப்படி கலெக்ட் பண்ணிக்கறது? ‘’ என்று கேட்டார். 

அமைப்பாளர் ‘’அதைத் தனியாக யோசிப்போம்’’ என்றார்.