Saturday 29 June 2024

நேரு குடும்ப பண்டிட்கள்

இன்று ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது நேரு குடும்பத்தில் ஜவஹர்லால் நேருவுக்குப் பின் இளநிலை பல்கலைக்கழக பட்டம் பெற மூன்று தலைமுறை ஆகியிருக்கிறது என்று நான் அறிந்திருந்த சாதாரண தகவல் ஒன்றைச் சொன்னேன். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் குடும்பமே பண்டிதர்கள் குடும்பம் ; நீங்கள் கூறுவது பிழையான தகவல் என்றார். அவரிடம் சொன்னேன். நேரு பண்டிட் நேரு என அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் ‘’காஷ்மீர் பண்டிட்’’ என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்றேன். அவருக்கு அந்த தகவலும் புதிதாக இருந்தது. நேருஜி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும் சட்டத்தில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றவர். நேருஜி அறிஞர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  

நேருவின் மகளான இந்திரா பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர். கல்லூரியில் சேர்ந்தார். எனினும் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்யவில்லை. கல்லூரிப்படிப்பை பட்டம் பெறாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டார். 

இந்திராவின் மகனும் நேருவின் பேரனுமான ராஜிவ் டேராடூன் ’’டூன் ராணுவப் பள்ளி’’யில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர். பட்டப்படிப்பு பயில லண்டன் சென்றார். ஆனால் பட்டம் பெறவில்லை. படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் விமானம் ஓட்டுவதற்கான ‘’பைலட் லைசன்ஸ்’’ பரீட்சை எழுதி பைலட் ஆனவர். 

இந்திராவின் மகனும் நேருவின் பேரனுமான சஞ்சய் காந்தியும் பள்ளிப்படிப்பை முடித்தவர். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யாதவர். 

நேரு குடும்பத்தில் நேருவுக்குப் பின் அடுத்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்த அவரது வாரிசுகள் பட்டம் பெற்றவர்கள் அல்ல. 

நான் கூறுவதில் பிழை இருந்தால் அவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்த கல்லூரி எது படித்த பட்டம் என்ன என்று  எனக்கு கூறுங்கள் என்று சொன்னேன். நண்பர் இணையத்தில் ரொம்ப நேரமாக விதவிதமாக தேடிப் பார்த்தார். பின்னர் சோர்வுடன் ‘’நீங்கள் சொல்வது உண்மை’’ என்றார்.