Sunday 30 June 2024

குஞ்சமேடு

 ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது. எழுத்தாளர் கல்கி பிறந்த ஊர். மணல்மேடு கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. மணல்மேட்டுக்கு வடக்கே கொள்ளிடம் ஆற்றுக்கு அப்பால் அமைந்துள்ள கிராமம் முட்டம். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் முட்டத்தையும் மணல்மேட்டையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டது. 

செவிவழிச் செய்தியாக முட்டம் அருகே இருக்கும் கொள்ளிடக் கரை கிராமம் ஒன்றில் ஸ்ரீராகவேந்திர சுவாமி அதிஷ்டானம் இருப்பதாக அறிந்தேன். அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்ய இப்போது வாய்ப்பு கிடைத்தது. 

முட்டத்துக்கு கிழக்கே கொள்ளிடக் கரையில் குஞ்சமேடு என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கே கொள்ளிட நதிக்கரையிலேயே ஸ்ரீராகவேந்திர சுவாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது. துவைத மார்க்கத்தைச் சேர்ந்த துறவியான ஸ்ரீராகவேந்திரர் பிறந்தது சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில். சிதம்பரம் புவனகிரி இரு ஊர்களுக்கும் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர தீர்த்தர் சுவாமிகளிடம் சீடனாகக் கல்வி பயின்றிருக்கிறார். தஞ்சாவூரில் பல ஆண்டுகள் தவம் புரிந்திருக்கிறார். பழைய தென்னாற்காடு பழைய தஞ்சாவூர் மாவட்டங்களில் ஸ்ரீராகவேந்திரர் வாழ்வுடன் தொடர்புடைய பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் அதிஷ்டானங்களும் ஆலயங்களும் அமையப் பெற்று பூசனைகள் நடைபெறுகின்றன. 

120 ஆண்டுகளுக்கு முன்பு பழைய தென்னாற்காடு மாவட்டம் ( தற்போது கடலூர் மாவட்டம்) குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதியடைந்த மந்த்ராலயம் சென்று அங்கிருந்து அதிஷ்டானத்தின் புனித மண்ணை குஞ்சமேடு கிராமத்துக்குக் கொண்டு வந்து அதிஷ்டானம் அமைத்து பூசனை புரிகின்றனர். 

துறவியை வணங்குவதும் துறவைப் போற்றுவதும் நம் நாட்டின் சிறப்பியல்புகள். அதிஷ்டானத்தை வணங்கியது மனநிறைவைத் தந்தது.