Monday 26 August 2024

ஞாயிற்றுக்கிழமை

 நம் சமூகத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பது முழுமையாக எந்த பணிகளும் இல்லாத நாள் என்பது போல் ஒரு மனப்பதிவு உருவாகி விட்டது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பிலிருந்து அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கின்றன. அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஆவணி, தை ஆகிய மாதங்களில் திருமண முகூர்த்தங்கள் அதிகம் என்பதால் அப்போதும் ஞாயிறுகளில் பணிகள் நடக்கும். பாரத ஸ்டேட் வங்கி பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக தங்கள் கிளைகளை ஞாயிறன்று திறந்து வைத்து குறைந்தபட்ச வங்கி சேவைகளை அளித்தார்கள். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகின்றன. அவை விரும்பப்படுகின்றன. 

ஞாயிறன்று பணி புரிய வேண்டும் என்று நான் விரும்புவேன். நேற்று நான்கு பணிகள் வைத்திருந்தேன். நான்கும் அலுவல் சார்ந்த பணிகள். அதில் மூன்று பணிகளை நிறைவு செய்தேன். 

நண்பர் ஒருவரைச் சந்திக்க மதிய நேரத்தில் வருவதாகக் கூறியிருந்தேன். இருப்பினும் மாலை 5 மணி அளவிலேயே செல்ல முடிந்தது. நண்பர் உற்சாகமான இயல்பு கொண்டவர். பழகுவதற்கு இனியவர். அவர் வீட்டில் 50 வயது கொண்ட வேப்பமரம் இருக்கிறது. அதன் நிழலில் அமர்ந்து கொள்வதே மனதிற்கு இதமாக இருக்கிறது. 

வேம்பின் நிழலில் அமர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். பொழுது அணையும் நேரத்தில் மேற்கு வானில் மாலையின் முதல் நட்சத்திரத்தைக் கண்டோம்.