Thursday 19 September 2024

14 மரங்கள் - மாநில தகவல் ஆணையம் ( மறுபிரசுரம்)

  ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் அந்த தெருவில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் நட்டு வளர்த்து பராமரித்த பத்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் 09.07.2021 அன்று வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு இல்லாமல் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களின் பொருள் மதிப்பு மிக அதிகம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அந்த கிராமத்தின் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

வட்டாட்சியர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியிடம் இந்த சம்பவம் தொடர்பான கோப்பினை முழுமையாக அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரப்பட்டது. பொது தகவல் அதிகாரி எந்த தகவலும் அளிக்கவில்லை. அதனால் வட்டாட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மேல்முறையீட்டுக்கும் பதில் இல்லை என்பதால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு சில நாட்கள் கழித்து வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரி கோப்பின் சில பகுதிகளை மட்டும் அனுப்பியிருந்தார். அவை நாம் கோரிய முழுமையான தகவல்கள் இல்லை. 

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு தபால் அனுப்பியிருந்தது. அதாவது, மாநில தகவல் ஆணையம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பி விண்ணப்பதாரர் கோரிய விபரங்களை அளித்து விட்டு விபரம் அளிக்கப்பட்டதை ஆணையத்துக்கு ஒரு மாதக் காலக்கெடுவில் தெரிவிக்குமாறு கோரியிருந்திருக்கிறது. அந்த காலக்கெடுவைத் தெரிவித்து அதற்குள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை என்றாலோ அல்லது முழுமையான விபரங்கள் அளிக்கப்படாமல் இருந்தாலோ மாநில தகவல் ஆணையத்துக்கு விபரம் தெரிவிக்குமாறு அந்த தபாலில் கூறப்பட்டிருந்தது. வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாநில தகவல் ஆணையத்துக்கு எந்த தபாலும் அனுப்பப்படவில்லை. நமக்கும் எந்த தபாலும் வரவில்லை.  

மாநில தகவல் ஆணையம் என்பது நீதிமன்றத்துக்கு சமானமான அதிகாரம் கொண்ட அமைப்பு. அந்த அமைப்பின் அறிவுறுத்தலின் படி கூட வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நடக்க மறுக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன என்பதை எவரும் யூகித்து விட முடியும். அந்த கோப்பு முழுமையாக வழங்கப்பட்டால் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு அந்த கோப்பின் மூலம் பலவிதமான அசௌகர்யங்கள் ஏற்படும். அந்த விஷயத்தின் உண்மை முழுமையாக வெளிவரும். எனவே அதனை தவிர்க்கப் பார்க்கிறார்கள். 

மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருந்தவாறு ஒரு கடிதத்தை ஆணையத்துக்கு அனுப்பி விட்டேன். இனி ஆணையம் இதனை விசாரணை செய்யும். அந்த விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.