Tuesday, 30 December 2025

மறைபிரதி (நகைச்சுவைக் கட்டுரை)

இலக்கிய வாசகரான எனது இளம் நண்பருக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் ‘’சக கமனம்’’ கதையை வாசிக்கப் பரிந்துரைத்தேன். இணையத்தில் இருந்த அந்த கதையை தனது திறன்பேசி மூலம் மெல்ல வாசித்தார். ரொம்ப நேரம் அந்த கதையை வாசிக்க எடுத்துக் கொண்டதாக எனக்குத் தோன்றியது. சற்று நேரம் சென்ற பின் வாசித்து விட்டேன் என்று கூறினார்.  

‘’அந்தக் கதையில என்ன வாசிச்ச?’’ என்றேன். 

நண்பருக்கு நான் கேட்ட கேள்வியே சற்று சங்கடமாக இருந்தது. மௌனம்தான் பதில். 

‘’அந்த கதையை என்கிட்ட சொல்லு. அதுலயிருந்து நீ என்ன உள்வாங்கியிருக்கன்னு நான் தெரிஞ்சுக்கறன்’’ என்றேன். 

நண்பர் அந்த கதையை சொல்லி விட்டார். 

‘’கதை உனக்குள்ள போயிருக்கு. நல்ல விஷயம். அந்த கதையில கதையோட ஆசிரியன் நேரடியா சொல்லாத ஆனா காட்டுற வாசகன் கற்பனை செஞ்சு போக வேண்டிய இடைவெளிகள் இருக்கு. அத நோக்கி நீ போகணும். அத நீ கற்பனை செஞ்சுக்கணும் ‘’ 

நண்பருக்கு அவ்விதமான இடைவெளிகள் எவை என்று யோசிக்க முற்பட்டார். 

‘’சாதவாகன அரசன் பேரரசன். போர்க்களங்களில் பெரும் வெற்றிகளைப் பெற்றவன். ஆனால் அவன் மொழித்திறன் குறைவு. இங்கே வாசகன் கற்பனை வேண்டிய விஷயம் அரசன் பருப்பொருளான நிதியையும் செல்வத்தையும் ஆள்பவன். மொழியின் அருவமான சில சுபாவங்களை அவன் கற்கவோ உணரவோ இல்லை. இங்கே திடம் அருவம் என்ற எதிரிடை இருக்கிறது என்பது வாசகன் உணர வேண்டியது ‘’ என்றேன். 

வாசகருக்கு நான் சொல்வதில் விஷயம் இருக்கிறது என்று தோன்றியது. 

‘’அவன் மொழி பயில வேண்டும் என முடிவெடுக்கிறான். அப்போது அவன் ஏன் இலக்கணம் பயில விரும்புகிறான்?’’

வாசகர் யோசித்தார். 

’’அவன் ஓர் எதிர்மறை உணர்வால் மொழி நோக்கி வருகிறான். மொழியின் சாரத்தை அணுக திறந்த மனம் வேண்டும். அது அவனுக்கு இல்லை. இலக்கணத்தையே அவன் சென்றடைகிறான்.’’

வாசகர் என்னிடம் ஒரு தெளிவான வரைபடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். 

‘’இலக்கணத்தை முற்றறிய 12 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இலக்கணம் படிக்கவே அத்தனை உழைப்பு தேவை. அவ்விதமெனில் இலக்கியம் படைக்க?’’

வாசகர் என் மனஓட்டத்துடன் இணையத் தொடங்கினார். 

‘’அரசி சொல்கிறாள் : இலக்கணம் அறிந்த மன்னர் ஒரு பூங்காவில் இருக்கும் வேலியின் முட்களையே காண முடிகிறது. பூக்களை அவர் காண்பதே இல்லை என’’

இந்த வரியைச் சொன்னதும் வாசகருக்கு அந்த கதையின் சாரம் என்ன என்பது புரிந்து விட்டது. புன்னகை பூக்கத் தொடங்கினார். 

‘’இப்ப ஏன் சிரிக்கற?’’

‘’இப்ப எனக்கு அந்த கதை புரிய ஆரம்பிச்சிடுச்சு.’’

‘’சுப்ரதிஷ்டா மாநகரை விட்டு குணாட்யர் ஏன் பர்வதத்துக்கு வரார். அவரோட சென்சிபிளிட்டி எதனால டிஸ்டர்ப் ஆகுது. இதெல்லாம் வாசகன் யோசிக்க வேண்டிய விஷயங்கள். கற்பனை பண்ண வேண்டிய விஷயங்கள்.’’

வாசகருக்கு திருப்தி உண்டானது. 

‘’என் பிளாக்ல அந்த கதை பத்தி எழுதியிருக்கன். வாசிச்சுப் பாரு.’’