Wednesday, 24 December 2025

எஸ் ஐ வி ஏ - நாச்சியார் - ராணா சீனா (நகைச்சுவைக் கட்டுரை)

காரைக்குடி நண்பருக்கு கோட்டையூரில் கோட்டை போல வீடு இருக்கிறது. இருப்பினும் சில வசதிகளுக்காக காரைக்குடியில் வடமலையான் பெயர் கொண்ட அடுக்ககத்தில் ஐந்தாவது மாடியில் வசிக்கிறார். ஐந்தாவது மாடியில் நான்கு வீடுகள். அதில் ஒரு வீட்டில் எஸ் ஐ வி ஏ என்னும் சிவா என்னும் பெரிய கருப்பன் வசிக்கிறார். ‘’வசிக்கிறார்’’ என்பதை விட ‘’பயணிக்கிறார்’’ என்பது பொருத்தமாக இருக்கும். ஐந்தாவது மாடியின் நான்கு வீடுகளுக்கும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குப் பயணிப்பதே அவருக்கு வேலை. அவருடைய இல்லத்தில் அவருக்கு பெரியகருப்பன் என நாமகரணம் செய்வித்து சிவா என்பதை அழைப்புப் பெயராக அமைத்துக் கொண்டனர். மேற்படி இரண்டு பெயர்களையும் பரிசீலத்த பெயர்களுக்கு உரியவர் தனக்கு எஸ் ஐ வி ஏ என பெயர் சூட்டிக் கொண்டார்.  ’’இந்தியாவிலேயே ஏன் இந்த வேர்ல்டுலயே’’ இரண்டு வயதில் ஒரு புனைப்பெயரை சூடிக் கொண்டவர் பெரியகருப்பனாகத்தான் இருப்பார். அழகான குண்டான சிறு குழந்தை அவன். குலதெய்வம் கோயிலில் முடி இறக்க நீண்ட தலைமுடியை வளர்த்திருக்கிறான். அடுக்ககத்துக்குள் பயணிப்பவனை ஒரு பிளே ஸ்கூலில் சேர்த்திருக்கின்றனர். 

காரைக்குடியில் நண்பர் வீட்டுக்குச் சென்று சேர்ந்ததும் நண்பர் காரைக்குடியின் முக்கியமான ஆயுர்வேத மருத்துவரும் தமிழின் முக்கியமான படைப்பாளியுமான எழுத்தாளருக்கு ஃபோன் செய்தார். நான் நண்பரிடம் ‘’ டாக்டர் இப்போ ஹாஸ்பிடல்ல பேஷண்ட்ஸ் பாத்துகிட்டு இருப்பார். அவரை டிஸ்டர்ப் செய்யாதீங்க. நாம பண்ணைக்கு போய்ட்டு திரும்பி வர ஈவ்னிங் ஆகும். அப்ப டாக்டரை பாத்துப்போம்’’ என்றேன். இருப்பினும் நண்பர் டாக்டரை டிஸ்டர்ப் செய்யும் விதமாக ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்த டாக்டர் ‘’ சென்னைல இருந்து ரிலேட்டிவ்ஸ் குழந்தைங்க வக்கேஷனுக்கு இங்க வந்திருக்காங்க. குழந்தைங்க ‘’அவதார்’’ படம் பாக்கணும்னு சொன்னாங்க. நான் இப்ப அவதார் பாத்துக்கிட்டு இருக்கன். அப்புறம் பேசறன்’’ என்றார். 

‘’நாச்சியார் திருமொழி’’ எழுதிய நாச்சியாரின் பெயர் கொண்ட நண்பரின் மகள் சிறப்பான ஓவியர். வயது எட்டு இருக்கும். வீடு முழுக்க அவரது ஓவியங்கள். ஓவியரின் அண்ணன் பெயர் ராணா சீனா. அவர் சிறந்த வில்லாளி. தற்போது பறவை பார்த்தலில் ஆர்வம் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளை அடையாளப்படுத்த அறிந்திருக்கிறார். 

மூன்று குழந்தைகளும் நேற்றைய தினத்தை ஒளி மிக்கதாக ஆக்கினர்.