காரைக்குடியில் வசிக்கும் நண்பரின் ஐந்து ஏக்கர் பண்ணைக்கு நேற்று சென்றிருந்தேன். தனது ஆர்வத்தாலும் சொந்த முயற்சியாலும் தனது வயலை மிகச் சிறப்பான நிலையில் பராமரித்து வைத்திருக்கிறார். அதில் தன்னை விட தனது தந்தைக்கு அதிக பங்களிப்பு இருக்கிறது என்பதைக் கூறுகிறார். அவரது ஐந்து ஏக்கர் வயலை பின்பக்கம், இடது பக்கம், வலது பக்கம் என நம் புரிதலுக்காக வகுத்துக் கொள்ளலாம். பின்பக்கம் 1 ஏக்கர். இடது பக்கம் 2 ஏக்கர். வலது பக்கம் 2 ஏக்கர். மொத்த 5 ஏக்கர் நிலத்துக்கும் கம்பி வேலி அமைத்துள்ளார். மொத்த பாசனத்துக்கும் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்துகிறார். இவ்விதம் மட்டுமே செய்ய வேண்டும் என பல விஷயங்களைத் தீர்மானித்துக் கொண்டு மெல்ல அவற்றை நோக்கி முன்சென்றுள்ளார். பின்பக்கத்தில் பல மரங்களை நெருக்கமாக நட்டுள்ளார். அது சிறு வனம் அவரது ஆத்ம திருபதிக்காக அமைக்கப்பட்டது. அதில் ஆஃப்ரிக்கன் தேக்கு என்ற மரவகை மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. நைஜீரியா தேக்கைத்தான் ஆஃப்ரிக்கா தேக்கு என்று கூறுகிறாரா என எண்ணினேன். பிசிறு இல்லாமல் அம்மரங்கள் வளர்ந்திருந்தன. வலது பக்கம் 2 ஏக்கரில் தென்னை நட்டு தென்னந்தோப்பை உண்டாக்கியுள்ளார். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் போதிய இடைவெளி கொடுத்து மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் தோப்பு. இடது பக்கம் 2 ஏக்கரில் நெல் வயல். நெல் வயல் வரப்பு இரண்டரை அடி அகலத்துடன் இருந்தது. வயல் வரப்பில் மட்டும் 12 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் 2 அடிக்கு 2 அடி என 2 அடி ஆழத்தில் குழு எடுத்து அதில் மக்கிய சாண எரு இட்டு 100 தேக்குக் கன்றுகளை நடுமாறு கூறினேன். அதுவும் நிகழ்ந்தால் அவருடைய பண்ணை எல்லா விவசாயிகளுக்கும் எல்லா வகையிலும் எடுத்துக்காட்டாக அமையும் மாதிரிப் பண்ணையாக அமையும். தை மாத அறுவடைக்குப் பின் நண்பர் அதனையும் நிகழ்த்துவார் என்று தோன்றியது.