Thursday, 8 January 2026

அப்படி ஒன்று எப்படி இருக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனை பல அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தின் போதிய பெரும்பான்மையுடன் இரு அவைகளிலும் அந்தச் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ‘’அந்தச் ச்ட்டம் எல்லா குடிமக்களுக்கும் எதிரானது’’ என்று கருத்து தெரிவித்தார். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு கிராமத்து மனிதர். மாநிலக் கட்சி ஒன்றில் கிராம அளவிலான பொறுப்பு வகிக்கிறார். செய்தித்தாளில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தை வாசித்து விட்டு என்னிடம் கேட்டார் : ‘’சார் ! ஒரு சட்டம் வந்தா இந்த சட்டம் ஏழைகளுக்கு எதிரானது அப்படின்னு சொன்னா அது பணக்காரங்களுக்கு சாதகமானதுன்னு புரிஞ்சுக்கலாம். தொழிலாளிகளுக்கு எதிரானதுன்னா முதலாளிகளுக்கு சகாயம் செய்வதுன்னு புரிஞ்சிக்கலாம். நடுத்தர வர்க்கத்துக்கு எதிரானதுன்னா உயர் நடுத்தர வர்க்கத்துக்கு ஆதரவானதுன்னு புரிஞ்சுக்கலாம். யாரோ ஒருத்தருக்கு எதிரா இருந்தா யாரோ ஒருத்தருக்கு ஆதரவா இருக்கும். அது எப்படி சார் ஒரு சட்டம் எல்லாருக்கும் எதிரா இருக்க முடியும் ?’’

எனக்கு கிராமத்து மனிதருடைய பொதுப் பிரக்ஞை திருப்தியளித்தது.