கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீட்டைச் சுற்றி சுற்றி ஒரு பூனை வந்து போய் கொண்டிருந்தது. குட்டிகளைப் பிரசவித்திருக்குமோ என ஐயம். குட்டிகளை எங்கே வைத்திருக்கிறது என்பது தெரியவில்லை. முன் பின் கதவுகளின் வழியாக ஜன்னல் வழியாக என பலவகைகளில் வீட்டுக்குள் வரவே விரும்பியது. பூனைக்குட்டிகளின் ‘’மியாவ் மியாவ்’’ சத்தம் கேட்கவேயில்லை. ஒருமுறை நான் பார்க்கையில் தரையிலிருந்து வாஷிங் மெஷின் மீது தாவி ஏறி அங்கிருந்து குளியலறையின் ‘’லோ-ரூஃப்’’ மீது தாவி ஏறியது. அங்கேயே வெகுநேரம் இருந்தது. குளியலறையின் ரூஃப் ஏழு அடி உயரத்தில் இருந்ததால் வீட்டின் பத்து அடி உயர ரூஃப்-க்கும் அதற்கும் இடையில் மூன்று அடி உயரம் கொண்ட பரண் இருந்தது. அதில் குட்டிகள் இருக்கின்றன என யூகித்தேன்.
பூனை வெளியில் போயிருந்த நேரத்தில் லாஃப்ட் மீது ஏறி பார்த்தேன். இரண்டு குட்டிகள் இருந்தன. அவற்றை எடுத்து வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் புதர் மண்டிய இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டேன்.
அவ்விதம் செய்தாலும் மனம் அமைதியற்று இருந்தது. நாய் காகம் போன்ற வேறு பிராணிகளால் அந்த குட்டிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமா என என் மனம் துயருற்றது. பத்து நிமிடத்துக்கு ஒருமுறை என நான் விட்டு விட்டு வந்த இடத்தில் குட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா என பார்த்து விட்டு வந்தேன். மூன்றாம் முறை பார்க்கச் செல்கையில் குட்டிகளை நான் விட்ட இடத்திற்கு 20 அடி தொலைவில் தாய்ப்பூனை அமர்ந்திருந்தது. குட்டிகளை அது பார்த்திருக்கும். மோப்பத்தின் மூலமே அவை அறிந்து விடும் என்றாலும் பூனைக்குட்டிகளை நோக்கிச் சென்றேன். நான் முன்நகர்ந்து வருவதால் பூனை பக்கவாட்டில் நடந்து சென்றது . பூனைக்குட்டிகள் அருகே சென்றதும் அவற்றுக்கு 10 அடி தொலைவில் அவற்றை நோக்கிய வண்ணம் பூனை நின்றது. நான் விலகினேன். பூனை குட்டிகளை கவ்விக் கொண்டு வேறொரு இடத்துக்குச் சென்றது.
தாயும் சேயும் நலமாயிருப்பது மகிழ்ச்சி அளித்தது. என் மனம் அமைதியடைந்தது.
பாரதியின் ‘’வெள்ளை நிறத்தொரு பூனை’’ வாசித்த நினைவு வந்தது.