சென்ற வாரம் பாரத நிலத்தில் 2000 + 2000 என 4000 கி.மீ பயணம் மேற்கொண்டேன். அப்போது எனது நேரடி மனப்பதிவாக சில விஷயங்களை அவதானித்தேன். சில விஷயங்களை சிந்தித்தேன். பாரத நிலம் எப்போதுமே ஒரு பயணிக்கு பல விஷயங்களை உணர்த்தும். பாரத நிலமே யாத்ரிகர்களுக்கானது.
1. மகாராஷ்ட்ராவிலும் குஜராத்திலும் வாழை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுவதைக் கண்டேன். சொட்டு நீர் பாசனம் மூலம் வாழை பயிர் செய்யப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் வாழைப்பழங்களும் காய்கறிகளும் அதிகம் விளையும் என்பதைக் கண்டிருக்கிறேன். இப்போது மகாராஷ்ட்ராவில் குஜராத்தில் அதிகம் விளைவதைக் காண்பது மகிழ்ச்சி தந்தது. நம் மரபு ‘’அன்னம் பஹூ குர்வித:’’ - ‘’உணவைப் பெருக்குங்கள் ; அதனை விரதமாக மேற்கொள்ளுங்கள்’’ என்கிறது. ஓர் இடத்தில் ஒரு ஏக்கர் அளவில் வாழை பயிர் செய்யப்படும் என்றாலும் அது நூற்றுக்கணக்கானோரின் பசியைத் தீர்க்கவிருக்கிறது என்று பொருள். ஓர் இடத்தில் ஒரு வாழைமரம் இருக்குமென்றாலும் அது ஏதோ ஒரு குடும்பத்துக்கு ஒருவேளையின் பசிக்கு உணவாகப் போகிறது என்று பொருள். விதவிதமான பயிர்கள் விளைவிக்கப்படுவது என்பது சிறந்த விஷயம்.
2. பாரத நிலத்தில் பல மொழிகள் கற்க வாய்ப்பு இருக்க வேண்டும். மாநில மொழியும் ஆங்கிலமும் என்பது அரசாங்க உத்யோகத்துக்கும் தனியார் உத்யோகத்துக்கும் பயன்படும். அரசாங்க உத்யோகம் என்பது நாட்டின் மக்கள்தொகையில் 1 சதவீதம் மட்டுமே. தனியார் உத்யோகம் என்பது 4 சதவீதம் இருக்கலாம். இங்கே தொழிலாளர்களும் விவசாயிகளுமே அதிகம். அவர்கள் வாய்ப்பு இருக்கக் கூடிய பல மாநிலங்களுக்கு உத்யோகத்துக்கு செல்ல வேண்டி வரலாம். அப்போது அவர்கள் பல மாநில மொழிகளை குறைந்தபட்சமாக அறிந்திருப்பது உகந்ததே. ஒரு மாநிலத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மாநிலங்களின் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்னும் நிலை இருக்க வேண்டும்.
உதாரணமாக கர்நாடக மாநிலத்தில் மலையாளம், தமிழ்,தெலுங்கு, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும். தேவையெனில் அரபியும் உருதுவும் கூட கற்பிக்கலாம். மொழிகள் மொழிகளே. அவற்றுக்கு மதம் கிடையாது ; அரசியல் கிடையாது. தமிழகத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம், அரபி, உருது ஆகியவற்றைக் கற்பிக்கலாம்.
கன்னடமும் தெலுங்கும் ஓரளவு ஒன்றியிருக்கும் மொழிகள். மராத்தியும் குஜராத்தியும் அவ்வாறே. ஒரிய மொழியும் பெங்காலியும் கிட்டத்தட்ட ஒன்று போலிருப்பவை. ஹிந்தி மராத்தி, குஜராத்தி, ஒரியா, பெங்காலி ஆகியவற்றுடன் இணைந்திருப்பது.
பாரதத்தின் எல்லா மாநிலங்களிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும். நாம் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாக நம் கல்வியில் சமஸ்கிருதம் இல்லாமல் இருப்பதைப் போன்ற ஒரு பின்னடைவு வேறில்லை. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.
கல்வியின் பொறுப்பு நம் நாட்டில் அரசாங்கத்திடம் இருக்கிறது. மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம். அரசாங்கத்தின் வேலை வரிவசூல் செய்வதும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதும் சமூக அமைதியை நிலைநாட்டுவதும் மட்டுமே. ஜனநாயக அரசு குடிகள் அனைவருக்கும் கல்வி வழங்கும் பொறுப்பையும் ஏற்கும். நம் நாட்டின் பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றை நோக்கும் போது கல்விக்கான பொறுப்பை ஒவ்வொரு கிராமமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காண முடியும்.
நம் நாட்டின் வளர்ச்சியில் பேரெழுச்சி ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் மத்திய அரசும் மாநில அரசும் அளிக்கும் கல்விக்கு இணையாக மிகக் குறைந்த அளவிலேனும் கிராமமும் ஊரும் சமூகமும் சமூக அமைப்புகளும் பண்பாட்டு அமைப்புகளும் குடிகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
மொழி ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் அந்த கணத்தில் பேசிக் கொள்வதற்காக மட்டும் உருவானதில்லை. மொழியே மானுடம் அடைந்த ஞானத்தை நமக்கு கற்பிக்கிறது. நாம் அடையும் ஞானத்தை நமது அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கிறோம்.
மத்திய அரசும் மாநில அரசும் கல்வி அளிப்பதில் போதாமை என்பது மொழிகளும் விளையாட்டும் இசையும். நம் நாட்டின் குழந்தைகளுக்கு பல மொழிக் கல்வியும் தினமும் விளையாட்டும் தினமும் இசையும் கற்பிக்கப்பட வேண்டும்.
நம் நாட்டின் மொழிகள் மட்டுமல்ல ; உலக மொழிகள் அனைத்தும் கற்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு பாரத நிலத்தில் இருக்க வேண்டும். கல்விக்கு உலகில் ஒரு நாடு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்தது என்றால் உலக அளவில் அதில் தொன்மை கொண்டது பாரத தேசமே. நம் நாட்டில் கல்வி கற்க 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கின்றனர்.
3. பாரதம் பசியை வென்று குறைந்தது 40 ஆண்டுகள் ஆகிறது. இன்று நமது அரசாங்கத்தால் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவு தானியங்களை அளிக்க முடிகிறது. இப்போது நம் நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவது உடற்பயிற்சியும் யோகாவும் ஆகும். பாரத நிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் யோகக் கல்வி கிடைக்க வேண்டும்.