நூல் : ஆனந்த தீர்த்தர் : தலித் உரிமையின் தனிக்குரல் ஆசிரியர் : ஏ.எம்.அயிரூக்குழியில் மொழியாக்கம் : நிர்மால்யா பக்கம் : 200 விலை ரூ.250 பதிப்பகம் : பரிசல் புத்தக நிலையம், 47, பிளாட் முதல் தளம்,தாமோதர் பிளாட், ஐஸ்வர்யா அபார்ட்மெண்ட், ஓம் பராசக்தி தெரு,வ.உ.சி நகர், பம்மல், சென்னை-600106.
லட்சியவாதத்தின் வெற்றியை லட்சியவாதிகள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் கண்களால் காண்கிறார்களா? லட்சியவாதத்தை ஏற்று நடந்த யாரும் தாங்கள் எந்த நோக்கத்தை நோக்கி முன்னேறினார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டதை முழுமையாகக் கண்டது இல்லை. எனினும் லட்சியவாதம் எப்போதும் இருக்கவே செய்கிறது. இலட்சியவாதிகளும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
சுவாமி ஆனந்த தீர்த்தர் கேரளத்தில் உள்ள தலச்சேரியில் கௌட சாரவஸ்த பிராமண குடும்பத்தில் ராமசந்திர ராவ், தேவு பாய் தம்பதியருக்கு மகனாகப் பிறக்கிறார். அவரது இயற்பெயர் ஆனந்த ஷெனாய். அவரது தந்தை அரசு அதிகாரியாகப் பணியாற்றியவர். செல்வந்தக் குடும்பம் அவர்களுடைய குடும்பம். சிறு வயதிலிருந்தே சுவாமி ஆனந்த தீர்த்தர் ஆன்மீக அமைப்புகள் பலவற்றுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஒரு துறவியாக வாழ வேண்டும் என்னும் தீரா விருப்பம் அவருள் வேரூன்றுகிறது. மானுட சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எண்ணமும் தீவிரமாக அவருக்கு இருந்திருக்கிறது. புதுச்சேரியில் இருந்த மகான் ஸ்ரீ அரவிந்தருக்கு தனது விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதுகிறார். தனது மார்க்கம் வேறுவிதமானது என அவருக்குப் பதிலெழுதிய அரவிந்தர் ‘’சத் சித் ஆனந்தம்’’ என அக்கடிதத்தில் சுவாமி ஆனந்த தீர்த்தருக்கு ஆசியளிக்கிறார். ஸ்ரீநாராயண குருவின் சீடராகவும் மகாத்மா காந்தியின் சீடராகவும் தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறார் சுவாமி. கேரளாவிலிருந்து குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்துக்கு கால்நடையாக நடந்து சென்று காந்தியை சந்திக்கிறார். தீண்டாமைக்கு எதிராகவும் பட்டியல் சாதி மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கிறார் சுவாமி ஆனந்த தீர்த்தர். சாதி பேதத்தின் அடிப்படை சுரண்டல் ஆகும். இன்னொரு மனிதனின் உழைப்பைச் சுரண்ட ஒரு மனிதன் எண்ணும் வரை சுரண்டல் இருக்கும். மனித அகத்தின் இருள் முழுவதும் வெளிப்படும் துர்குணங்களில் ஒன்று ‘’மாச்சர்யம்’’ எனப்படும். அகத்தில் சாதியின் இருளைக் கொண்டிருந்த சமூகத்துடன் தன் வாழ்க்கை முழுக்கப் போராடுகிறார் சுவாமி ஆனந்த தீர்த்தர். கணக்கற்ற முறை சாதி வெறியர்களால் உடல்ரீதியாக கடும் தாக்குதலுக்கு ஆளாகிறார். ஒருமுறை அவரை உயிருடன் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயற்சி செய்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார். ஆலயக்களில் பட்டியல் சாதியினர் நுழைய முழு உரிமையையும் பெறவும் தேனீர்க்கடைகளில் பட்டியல் சாதியினருக்கு சம உரிமை பெற்றுத் தரவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். பட்டியல் சாதி குழந்தைகளுக்காக அவர் ஆரம்பித்த உறைவிடங்களில் தங்கி நிறைய குழந்தைகள் படித்துப் பெரியவர்களாகி சமூகத்தில் முன்னேற்றமான நிலைமைக்குச் சென்றிருக்கின்றனர். சுவாமி ஆனந்த தீர்த்தர் தன் வாழ்வில் எதிர்கொண்ட வன்முறையும் தாக்குதல்களும் வாசிக்கும் எவர் நெஞ்சையும் உருக்கும். லட்சியவாதம் என்பது என்ன என்னும் கேள்விக்கான விடையாக சுவாமி ஆனந்த தீர்த்தரின் வாழ்வைக் கூறலாம்.