நேற்று சிதம்பரத்தில் ஒரு மருத்துவரைச் சந்தித்தேன். அவர் வீட்டின் முன்பகுதியில் மருத்துவம் பார்க்கிறார். தலைவலி, ஜூரம், செரிமானமின்மை ஆகிய எளிய நோய்களுக்கு மட்டுமே மருந்து எழுதித் தருகிறார். ஊசி போடுகிறார். காலை 7 மணியிலிருந்து மருத்துவம் பார்க்கத் தயாராக இருக்கிறார். காலை 7 லிருந்து 11 மணி வரை மக்கள் வருகிறார்கள். பின்னர் மாலை 5லிருந்து 8 மணி வரை வருகிறார்கள். பார்வை நேரம் தினமும் 7 மணி நேரத்துக்குக் குறையாமல் இருப்பதால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் மனைக்கு வந்து 10 நிமிடத்தில் ஊசி போட்டுக் கொண்டு அல்லது மருந்து எழுதி வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். அவரிடம் தரைவழி தொலைபேசி இருக்கிறது. அலைபேசி என்ற சாதனத்தை வாங்கவே இல்லை என்றும் பிறர் பயன்படுத்துவதைக் கண்டிருப்பதாகவும் ஆனால் ஒருமுறை கூட தான் பயன்படுத்தியதில்லை என்றும் சொன்னார்.