Tuesday, 12 March 2019

எதிர்பாரா பொழுது

லிஃப்ட் கேட்டு
பிரியத்துடன் முகம் நோக்கும்
மனிதன்
சிறிய கால இடைவெளியில்
நம்முடன் பயணிக்கும் போது
மனம் திறந்து
தன் சூழ்நிலையை
தன் மகிழ்ச்சியை
அல்லது
தன் கவலையை
எளிய சொற்களால்
பகிர்ந்து விடுகிறான்
அம்மனிதனிடமினிருந்து
விடை பெறும் பொழுது
பயிர் நுனியில்
குத்தி நிற்கும்
துளிப்பனி
காலை வெயிலில்
பயிரிடமிருந்து
பிரிந்து செல்வது போல்
இருக்கிறது
முதலில்
நாம் ஒரு புதிய உலகத்தை
கற்பனை செய்வோம்
பின்னர்
அதனை எவ்வாறு உருவாக்குவது
என்று
சேர்ந்து யோசிப்போம்

Monday, 11 March 2019

தீரா வியப்பு

இந்த
இவ்வளவு பெரிய பூமியில்
இவ்வளவு பெரிய வாழ்க்கையில்
இவ்வளவு உயிர்களுக்கு நடுவில்
நாம்
ஒவ்வொன்றையும்
எவ்வளவு எவ்வளவு
நினைத்துக் கொள்கிறோம்

வியப்பாக இருக்கிறது

அசைவு

இந்த வசந்த காலத்தில்
மரத்தின்
உச்சிக் கிளையில்
வான் போல
பூத்திருக்கும்
மலர்
இந்த பிரபஞ்சத்தில்
மலர்ந்திருக்கும்
புவி மலரென
அசைந்து
கொண்டு
இருக்கிறது
துயில் கலைந்த
மின்விசிறியின் ஒலி மட்டும்
கேட்கும்
அறையில்
மௌனமான இரவு
சமரசம் பேசுகிறது
சாத்தியங்களின்
கோட்டுச்சித்திரங்களை
வரைந்து காட்டுகிறது
எப்படியாவது
சமாதானம் கொண்டு வர
பிரயத்தனப்படுகிறது

Saturday, 9 March 2019

எனது
வன்முறைகளை
எப்போதும் சுமக்கும் படைக்கலன்களை
என்றும் உடனிருக்கும் தவிர்க்க இயலா சுபாவங்களை

இதோ
இந்த மலையில்
இந்த அந்திப் பொழுதில்
இந்த அஸ்தமன சூரியன்
முன்னால்
கைவிடுகிறேன்

விழிகளில் நிறைந்து
வெளியேறும்
என் கண்ணீரின்
ஊற்றுமுகம்
இருந்தது
எங்கே
அலைந்து திரிபவனின்
அகத்தில்
சில புன்னகைகள் இருக்கின்றன
சில பிரியங்கள் இருக்கின்றன
மகத்தான
சில உணர்வெழுச்சிகள் இருக்கின்றன
இன்னும் பகிர்ந்து கொள்ளாத
இன்னும் முழு உருவம் பெறாத
இன்னும் முற்றாக வெளிப்படுத்தாத
சில சொற்கள்
இருக்கின்றன

Friday, 8 March 2019

நீண்ட வெயிலுக்குப் பின்னான
மாலை
சிவப்பு அந்தியில்
கிராமத்துச் சாலை
களத்து மேட்டின்
அரசமரம்
இலைக்கண்களால்
கண்டது
இள வான் பிறையை
மரம் கண்டு
தன்னிடமிருந்து
ஈந்தது
ஒரு துளி ஒளி அமுதை
வான் பிறை
உழைத்துக் களைத்து
மர அடிவாரத்தில்
ஓய்வாய் அமர்ந்த உழவன்
கையில் வைத்திருந்த
பிஸ்கட் பொட்டலம்
மார்க்கமாக
அவன் குழந்தை நோக்கிப்
பயணித்தது
அமிர்தத்தின்
ஒரு துளி வானம்

திங்கள்

அந்தி விளக்கே
மாலையில் மலர்ந்த தென்றல்
மணம் வீசும் இந்த இரவில்
எங்கும் பரவி நிறைகிறது
நதியாக
உன் ஒளி
உன் கருணையால்
ஆதுரம் பெறுகிறது
மானுடர் துயர்
உன் பார்வை
விடுவிக்கிறது
அறியாமையின் தளைகளை
உணர்வெழுச்சியின்
தூய கண்ணீர்
காணிக்கையாக்கப்படுகிறது
யுக யுகங்களாக
உன்னிடம்

Friday, 1 March 2019

ஒரு தொகுப்பு

மண்ணுடன் மழை காதல் கொண்ட ஒரு பருவத்தில் சட்டெனத் திறந்த ஒரு மாயத்தால் நான் கவிதை எழுதத் துவங்கினேன். இப்போது அவற்றைத் தொகுக்கலாம் என எண்ணுகிறேன். தொகுப்பதன் வழியே முடிவற்ற வாழ்வின் பயணத்தில் முன்னகரவும் முடியும் என்று தோன்றுகிறது.