Thursday 26 April 2018

உச்சிப் பொழுதில் ஒளிரும் சூரியன்
உருவாக்கும்
மண்டப நிழலில்
அசை போட்டுக் கொண்டிருக்கின்றன
மேய வந்த ஆடுகள்

காய்ந்த புல்லினூடே 
செல்லும் அரவென
ஒற்றையடிப் பாதை

ஒரு நுனியில்
சிறு கிராமத்துச் சாலையும்
மறு நுனியில்
நூற்றாண்டுகள் கடந்த சிற்றாலயமும்

காலையில் வந்த பட்டர்
ஏற்றிய கல்அகல் தீபம்
அணையாமல் சுடர்கிறது
மாலை வரை

எப்போதோ வரும் யாத்ரிகன்
சுடர் அசைவில்
காண்கிறான்
ஒரு தொல்நகரின் பொழுதை
மண்டப சிற்பங்களை
மறக்கப்பட்ட வரலாற்றை

25.04.2018
16.25